பரமக்குடி அருகே இளைஞர் கொலை: கலவர பீதி
பரமகுடி: பரமக்குடியில் ரயில்வே நிலையம் அருகே இருந்து இமானுவேல் சேகரன் நினைவிடத்துக்குச் செல்லும் வகையில் புதிதாகப் போடப்பட்ட சாலையில் இளைஞர் ஒருவர் நேற்று நள்ளிரவு படுகொலை செய்யப்பட்டார்.
பரமக்குடியைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் மகனான திருமால் (38) தான் படுகொலை செய்யப்பட்டவர் ஆவார். இதனால் அந்தப் பகுதியில் பெரும் ஜாதிக் கலவரம் ஏற்படும் சூழல் நிலவுகிறது.
சமீபத்தில் இந்தப் பகுதியில் பசும்பொன் சென்று திரும்பிய இருவர் படுகொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. முத்துராமலிங்கத் தேவர் குருபூஜைக்கு சென்று திரும்பிய இருவர் கொலையான நிலையில், திருமால் கொலையாகியுள்ளார்.
இதையடுத்து ஜாதிக் கலவரம் வெடித்துவிடாமல் தடுக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் மேலும் 3 பஸ்கள் உடைப்பு:
இந் நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் தொடர்ந்து பஸ்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்று வருவதால் பதற்றம் நீடிக்கிறது.
தேவர் குருபூஜைக்கு சென்றவர்கள் இதுவரை 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு கண்டனம் தெரிவித்து அனைத்து தேவர் கூட்டமைப்பினர் புதன்கிழமை பந்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். இது முழு அளவில் இப் பகுதியில் நடைபெற்றது. அப்போது பல பேருந்துகள் தாக்கப்பட்டு, உடைக்கப்பட்டன. இந் நிலையில் மேலும் 3 பஸ்கள் உடைக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு பணியில் கவனக்குறைவு- 2 போலீசார் சஸ்பெண்ட்:
இதற்கிடையே தேவர் ஜெயந்தி குரு பூஜையின்போது பரமக்குடி அருகே உள்ள ரயில்வே கேட் பகுதியில் எமனேசுவரம் தலைமை காவலர் சேதுராமனுக்கு பாதுகாப்பு பணி ஒதுக்கப்பட்டு இருந்தது. இதேபோல் எமனேசுவரம் மற்றொரு தலைமை காவலர் சுலைமானுக்கு பொன்னையாபுரம் ரெயில்வே கேட்டில் பாதுகாப்பு பணி ஒதுக்கப்பட்டு இருந்தது.
ஆனால் அவர்கள் சரியாக வாகன தணிக்கையில் ஈடுபடாமலும், அஜாக்கிரதையாகவும் இருந்ததாகவும் எஸ்.பி. மயில்வாகனனுக்கு அறிக்கை கொடுத்தனர். அதன்பேரில் பாதுகாப்பு பணியில் அஜாக்கிரதையாக இருந்த தலைமை காவலர்கள் சேதுராமன், சுலைமான் ஆகிய 2 பேரை சஸ்பெண்ட் செய்துள்ளது காவல் துறை.












Click it and Unblock the Notifications