வைகை, குருவாயூர் ரயில்களுக்கு அசுத்த இடத்தில் உணவு தயாரித்த நிறுவனத்திற்கு சீல்
சென்னை: வைகை, குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு எழும்பூரில் உணவு தயாரித்த நிறுவனத்தை சோதனையிட்ட மாநகராட்சி அதிகாரிகள் அதை இழுத்து மூடி சீல் வைத்தனர்.
சென்னையில் இருந்து கிளம்பும் வைகை மற்றும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களுக்கு எழும்பூர் வீராசாமி தெருவில் உள்ள ஒரு வீட்டின் மொட்டை மாடியில் வைத்து உணவு தயாரித்து பேக் செய்து அனுப்பப்பட்டு வந்துள்ளது. சுகாதார வசதியின்றி உணவு தயாரிக்கப்பட்டதால் இது குறித்து அப்பகுதி மக்கள் மாநகராட்சியிடம் புகார் கொடுத்தனர்.
அவர்களின் புகாரின்பேரில் சுகாதார அதிகாரி டாக்டர் தங்கராஜ், மண்டல அதிகாரி டாக்டர் மணி ஆகியோர் நேற்று அந்த உணவு தயாரிக்கும் இடத்திற்கு சென்றனர். அப்போது மொட்டை மாடியில் வைத்து சிவா என்பவர் சி.கே.கே. கேட்டரிங் சர்வீஸ், ஆரென்கோ கேட்டரிங் நிறுவனங்களுக்கு உணவு தயாரித்து கொடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் உணவு தயாரிக்க மாநாகராட்சியிடம் இருந்து தொழில் உரிமம் பெறாததும் தெரிய வந்தது.
அங்கு கழிவு நீர் வெளியேற்றப்படாமல் சமைக்கும் இடத்திலேயே தேங்கியிருந்தது. இதனால் அக்கம் பக்கத்தினருக்கும், அந்த உணவை வாங்கி சாப்பிடுபவர்களுக்கும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த நிறுவனத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். அடுத்த கட்ட நடவடிக்கையாக ரயில்வே துறையின் உணவு பாதுகாப்பு தர நிர்ணய அதிகாரிகளுக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications