புது குழு அமைத்த கையோடு டெல்லியில் அலுவலகம் திறந்த ஹசாரே

அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிரான இயக்கத்தைத் தொடங்கி நடத்தி வந்தார். அதன் பிறகு அவரது குழுவில் இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் அரசியலுக்கு போகிறார் என்ற பேச்சு கிளம்பியது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட பிரச்சனைகளால் ஹசாரே தனது குழுவைக் கலைப்பதாக அறிவித்தார். இந்நிலையில் புதிய குழு அமைப்பது தொடர்பாக ஹசாரே நேற்று கிரண் பேடி, சமூக சேவகி மேதா பட்கர் மற்றும் கலைக்கப்பட்ட குழுவில் இருந்த சிலருடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
அதன் பிறகு 15 பேர் அடங்கிய குழுவை அவர் அறிவித்தார். பஞ்சாபின் முன்னாள் டிஜிபி சசிகாந்த், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அவினாஷ் தர்மாதிகாரி, லெப்டினன்ட் கர்னல் பிரிஜேந்திரா கோகர், ரான் சிங் ஆர்யா, சமூக ஆர்வலர் அக்ஷய் குமார் மற்றும் விவசாய நிபுணர் விசாம்பர் சவுத்ரி ஆகியோர் நேற்று அறிவிக்கப்பட்ட குழுவில் இடம்பெற்றுள்ள புது முகங்கள் ஆவர்.
இந்நிலையில் ஹசாரே தெற்கு டெல்லியில் உள்ள சர்வோதயா என்கிளேவில் புதிய அலுவலகம் ஒன்றை இன்று துவங்கியுள்ளார். அவர் வரும் ஜனவரி மாதம் 30ம் தேதி ஊழலுக்கு எதிரான தனது தேசிய பிரச்சாரத்தை துவக்கவிருக்கிறார்.












Click it and Unblock the Notifications