தீபாவளி பட்டாசு வெடிப்பு.. தமிழகத்தில் 150 இடங்களில் தீவிபத்து
சென்னை: தீபாவளிப் பண்டிகையான நேற்று பட்டாசு வெடித்தது தொடர்பாக தமிழகம் முழுவதும் 150 இடங்களில் தீவிபத்துகள் ஏற்பட்டன. இருப்பினும் தீயணைப்புப் படையினர் தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்து வைத்திருந்ததால் பெரிய அளவிலான விபத்துக்கள் ஏதும் ஏற்படவில்லை.
நேற்று தமிழகம் முழுவதும் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட்டது. தீபாவளி என்றாலே பட்டாசு வெடிப்பும், தீவிபத்தும் இணை பிரியாமல் நடப்பதாகும். எனவே இந்த முறை தீயணைப்புத் துறை தகுந்த முன்னேற்பாடுகளைத் தமிழகம் முழுவதும் செய்து வைத்திருந்தது.
அதன்படி அனைத்துத் தீயணைப்பு நிலையங்களிலும் ஒரு தீயணைப்பு வண்டியை மட்டுமே நிறுத்தி வைக்கவும், மற்ற வண்டிகளை முக்கிய இடங்களில் நிறுத்துமாறும் உத்தரவிடப்பட்டிருந்தது.
அதன்படி அனைத்துப் பகுதிகளிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சென்னையைப் பொறுத்தமட்டில் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் 22 இடங்களில் தீயணைப்பு வண்டிகள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. எங்காவது தீப்பிடித்து விட்டது என்ற தகவல் வந்தால் உடனே அங்கு விரைந்து செல்லும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதேபோல மற்ற நகரங்களிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதற்கு நல்ல பலன் கிடைத்தது. பட்டாசு வெடித்து தீவிபத்து ஏற்பட்ட இடங்களுக்கு உடனடியாக தீயணைப்பு வண்டிகள் விரைந்து சென்றன.
தமிழகம் முழுவதும் மொத்தமாக 150 இடங்களில் தீவிபத்துகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. காகித ஆலை, குடிசைகள், ஒரு உர ஆலை என தீவிபத்துகள் ஏற்பட்டன என்று தீயணைப்புத்துறை கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications