தர்மபுரி பாணியில் தஞ்சை அருகே கலவரம்..குடிசைகள் எரிப்பு, நகைகள் கொள்ளை
தஞ்சாவூர்: தர்மபுரி அருகே கலப்புத் திருமணத்தால் இரு தரப்புக்கு இடையே நடந்த பெரும் கலவரத்தைப் போல தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே இரு தரப்பினர் இடையே பெரும் மோதல் வெடித்தது. அதில் ஒரு தரப்பினர், இன்னொரு தரப்பினர் வசித்து வரும் வீடுகள், குடிசைகளைத் தாக்கி நொறுக்கி தீவைத்தனர். வீடுகளில் புகுந்து நகை, பணத்தையும் அள்ளிக் கொண்டு போய் விட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருக்காட்டுப்பள்ளியில் உள்ள பஸ் ஸ்டாப் அருகே சுவரில் ஒரு அமைப்பைச் சேர்ந்தவர்கள் விளம்பரம் எழுதி வைத்திருந்தனர். அப்போது அந்த விளம்பரத்தில் இருந்த அமைப்பின் தலைவர் பெயருக்கு அருகே அவதூறாக சிலர் கரிக்கட்டையால் எழுதினர். இதனால் சம்பந்தப்பட்ட அமைப்பைச் சேர்ந்தவர்கள் கடும் கோபமடைந்தனர்.
இதற்குப் பதிலடியாக இன்னொரு சமூக அமைப்பின் தலைவர் பெயருக்கு அருகே அவதூறு வார்த்தைகளை எழுதினர். இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது.
கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்டோர் அரிவாள், கட்டை உள்ளிட்டவற்றுடன் படை திரண்டு செல்வதைப் போல கிளம்பி சென்று இன்னொரு தரப்பினர் வசித்து வரும் வீடுகளுக்குள் புகுந்துதாக்கத் தொடங்கினர். குடிசைகளையும் தீவைத்துக் கொளுத்தினர். வீடுகளுக்குள்ளும் தீவைத்தனர். வைக்கோல் போர்களும் தீவைத்துக் கொளுத்தப்பட்டன.
வீடுகளுக்குள் புகுந்த அந்த வன்முறக் கும்பல் கண்ணில் பட்ட பொருட்களையெல்லாம் அடித்து நொறுக்கி வெறியாட்டம் போட்டது. மேலும் வீட்டில் இருந்த பீரோக்களை உடைத்து உள்ளே இருந்த பணம், நகை உள்ளிடட்வற்றையும் திருடினர்.
மதியழகன் என்பவரின் மகள் அனிதாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. வன்முறை நடந்தபோது வீட்டில் அனிதா மட்டுமே இருந்தார். வன்முறைக் கும்பல் அவரை ஒரு அறையில் தள்ளிப் பூட்டி விட்டு, வீட்டில் இருந்த அனிதாவுக்குக் கொடுப்பதற்காக வைத்திருந்த சீர்வரிசைப் பொருட்களை திருடிச் சென்றதுதான் பெரும் கொடுமையாகும்.
அரை மணி நேரத்தில் இந்த வெறியாட்டம் முடிந்தது. பின்னர் அத்தனை பேரும் தப்பி ஓடி விட்டனர்.
தகவல் அறிந்ததும் ஆயுதப் படை போலீஸார் விரைந்து வந்தனர். வன்முறை பரவாமல் தடுக்கும் வகையில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அக்கம்பக்கத்து கிராமங்களில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
வன்முறையில் ஈடுபட்ட 9 பேரை இதுவரை போலீஸார் பிடித்துக் கைது செய்துள்ளனர். மேலும் 40க்கும் மேற்பட்டோரை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications