ஏர்போர்ட்டில் போட்டோ எடுத்தவரை 'ரிலீஸ்' செய்ய போலீசாருக்கு ப.சிதம்பரம் கோரிக்கை

மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கடந்த செவ்வாய்க்கிழமை டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒருவர் அவரை தனது செல்போனில் படம் எடுத்தார். இதையடுத்து அவரைப் போலீஸார் தடுத்து நிறுத்தி அவரை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர்.
விசாரணையில் அவர் பெயர் அமீர் என்பதும், அவர் கொச்சியைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. அவரிடம் டெல்லி சென்று அங்கிருந்து துபாய் செல்வதற்கான விமான டிக்கெட் இருந்தது. கைதான அமீர் கேரளாவில் தடைசெய்யப்பட்ட என்.டி.ஏ. (தேசிய ஜனநாயக அமைப்பு) அமைப்பைச் சேர்ந்தவர் ஆவார்.
முன்னதாக அமீர் கடந்த மாதம் ட்ரீம் லைனர் விமானத்திற்குள் புகைப்படம் எடுத்து சிக்கினார். அப்போது எச்சரித்து விடப்பட்ட அவர் மீது தற்போது வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை நேற்று ஆலந்தூர் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தினர். அவரை 15 காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் அவரை உடனே விடுதலை செய்யுமாறு ப.சிதம்பரம் தமிழக போலீசாரை கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சென்னை விமான நிலையத்தில் நடந்த சம்பவம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஊடகங்களில் செய்தியைப் பார்த்து தான் தெரிந்து கொண்டு அதிர்ச்சி அடைந்தேன். இந்த சம்பவம் குறித்து யாருமே எனக்கு தெரிவிக்கவில்லை. அந்த நபரை போலீசார் ஏன் கைது செய்தனர் என்று தெரியவில்லை. உடனே சென்னையில் உள்ள எனது அலுவலகம் மூலம் புகைப்படம் எடுத்த வாலிபரை விடுதலை செய்யும்படி தமிழக போலீசாரை கேட்டுக் கொண்டேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications