அடடடடடா... தீபாவளிக்கு சரக்கு விற்பனை அமோகம், ரூ. 270 கோடிக்கு விற்றுத் தீர்ந்ததாம்!
சென்னை: எதிர்பார்த்ததை விட ஏகபோகமாக, அமோகமாக நடந்து முடிந்துள்ளது தீபாவளி... டாஸ்மாக் நிறுவனத்திற்கு. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட கூடுதலான தொகைக்கு மது பானங்கள் விற்றுள்ளதாம். அதாவது ரூ. 270 கோடி அளவுக்கு தீபாவளி மதுபான விற்பனை இருந்ததாம். இது கடந்த ஆண்டை விட ரூ. 20 கோடி எக்ஸ்ட்ராவாம்.
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது என்பது பகவத் கீதை வாசகம். ஆனால் தற்போது தமிழகத்தில் அது தலைகீழாக மாறி விட்டது. மது விற்றது, அதுவும் நன்றாக விற்றது என்று புது வாசகம் படைத்து வருகிறார்கள் டாஸ்மாக் நிறுவனத்தாரும், தமிழக அரசாங்கத்தாரும்.
புத்தாண்டு, பொங்கல், தீபாவளி உள்ளிட்ட விசேஷ நாட்களில் இலக்கு வைத்து மக்களைக் குறி வைத்து மது விற்று கல்லாவை அமோகமாக நிரப்பி வருகிறது அரசு. அரசின் டாஸ்மாக் மதுக் கடைகளால் பல ஆயிரம் குடும்பங்கள் சீரழிந்து வருவதாக பெண்களும், பல்வேறு அரசியல கட்சிகளும் புலம்பி வந்தாலும் கூட டார்கெட் போட்டு மதுவை விற்று படு வேகமாக செயல்பட்டு வருகிறது அரசு.
தமிழகத்தில் மொத்தம் 6,823 டாஸ்மாக் மதுக் கடைகள் உள்ளன. இந்தக் கடைகளில் தீபாவளிக்கு விற்பனை இலக்கு நிர்ணயித்தது அரசு. தீபாவளிக்கு சரக்கு வாங்க வரும் குடிமக்களுக்கு எந்தவிதமான சிக்கலோ, தவிப்போ, பற்றாக்குறை ஏமாற்றமோ இருக்கக் கூடாது என்பதற்காக ஏகப்பட்ட சரக்குகளை கூடுதலாகவே ஒவ்வொரு கடைக்கும் ஸ்டாக் அனுப்பி வைத்தது டாஸ்மாக் நிர்வாகம். ஒவ்வொரு கடைக்கும் 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை சரக்குகள் கூடுதலாக அனுப்பப்பட்டன.
தீபாவளியை ஒட்டி தொடர் விடுமுறை வந்ததால் மதுபான விற்பனை சூடு பிடித்தது. கடைகளில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது. குடிமக்கள் தங்களுக்கு விருப்பமான சரக்குகளை கேட்டு வாங்கி ருசித்து, ரசித்து ஓ போட்டபடி சென்றன்.
இந்த அமோக விற்பனை காரணமாக தீபாவளிக்கு 4 நாட்களுக்கு முன்பே விற்பனை அளவு ரூ.100 கோடியை தாண்டி விட்டது. நவம்பர் 10ம் தேதி ரூ.110 கோடிக்கு மதுபானம் விற்பனையானது. நவம்பர் 11ம் தேதி மட்டும் ரூ.100 கோடிக்கு விற்பனையானது.
உச்சகட்டமாக தீபாவளிக்கு முதல் நாளான 12ம் தேதி ரூ.150 கோடிக்கு விற்பனை நடந்துள்ளது. தீபாவளியன்று ரூ.120 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. தீபாவளி முதல் நாள் மற்றும் தீபாவளியன்று என 2 நாளில் மட்டும் ரூ.270 கோடி வசூலானது. கடந்த தீபாவளியன்று வெறும் ரூ.100 கோடிதான் வசூலானது என்பது குறிப்பிடத்தக்கது.
இலக்கை அடைந்ததற்கு மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டதும் ஒரு காரணம். இதுகுறித்து டாஸ்மாக் உயர் அதிகாரி கூறும்போது, கடந்த தீபாவளிக்கு ரூ.100 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டது. இந்த ஆண்டு டாஸ்மாக்கில் ரூ.125 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதை விட கூடுதலாக விற்பனை செய்யப்பட்டுள்ளது என்றார் உற்சாகமாக.
டாஸ்மாக் கடைகளில் மது விலை 3 முறை ஏற்றப்பட்டது. பீர் விலை ரூ.10 முதல் ரூ.15 வரை அதிகமானது. அதேபோல பிராந்தி, விஸ்கி போன்றவை ரூ.5 முதல் ரூ.40 வரை விலை உயர்த்தப்பட்டது.
எப்படியோ நல்லபடியா வித்து தீத்தாச்சுப்பா...'சியர்ஸ்'!! என்றபடி நிம்மதிப் பெருமூச்சு விட்டு வருகின்றனர் டாஸ்மாக் ஊழியர்கள்...!!!












Click it and Unblock the Notifications