கொங்கு மண்டல வளர்ச்சிக்கு பாடுபடும் கட்சியுடன்தான் கூட்டணி: கொமுக ஈஸ்வரன்
ஈரோடு: கொங்கு மண்டலத்தின் வளர்ச்சியில் அக்கறை காட்டும் கட்சியுடன் மட்டுமே நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைக்க உள்ளதாக கொங்கு நாடு முன்னேற்றக் கழகத் தலைவர் ஈஸ்வரன் கூறியுள்ளார்.
ஈரோட்டில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது,
தமிழகத்துக்கான மொத்த வருமானத்தில், சுமார் 50% கொங்கு மண்டலத்தில் இருந்தே கிடைக்கிறது. தமிழகத்தின் வடக்கு மற்றும் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் லட்சக் கணக்கில் இங்கே வேலை செய்கின்றனர். அவர்களுக்கான வருமானமும் கொங்கு மண்டலத்தைச் சார்ந்தே உள்ளது.
கொங்கு மண்டலத்தில்தான் தொழில் வளர்ச்சி அதிகம். ஆனால் மின்பற்றாக்குறையினால் இங்கு தொழில் பாதிக்கப்படுகிறது. எனவே சென்னையைப் போல் கொங்கு மண்டலத்துக்கும் மின் விநியோகம் செய்து தரப்பட வேண்டும்.
சென்னை மற்றும் கொங்கு மண்டலம் இரண்டுக்கும் பொதுவாக 5 மணி நேர மின்வெட்டை அமல்படுத்தி சமாளிக்க வேண்டும். இதனை வலியுறுத்தி விரைவில் ஆர்ப்பாட்டங்களை நடத்தவுள்ளோம்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் உள்ள வளர்ச்சிப் பணிகளில் அக்கறை செலுத்தும் கட்சியுடன் மட்டுமே கூட்டணி வைத்துக் கொள்வோம் என்றார் ஈஸ்வரன்.