ஐ.நா. மனித உரிமை ஆணைய 47 உறுப்பு நாடுகளின் தூதர்களை சந்திக்க டெசோ குழு முடிவு
சென்னை: ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் 47 உறுப்பு நாடுகளின் தூதர்களிடம் டெசோ மாநாட்டு தீர்மானங்களைக் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் டெசோ அமைப்பின் கலந்துரையாடல் கூட்டம் நேற்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி, திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன், திராவிடர் கழகத்தின் தலைவர் கி. வீரமணி, விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன், திமுகவின் சுப்புலட்சுமி ஜெகதீசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் ஐ.நா.வுக்கும் லண்டன் மாநாட்டிலும் கலந்து கொண்ட மு.க. ஸ்டாலின், டி.ஆர்.பாலு, டி.கே.எஸ். இளங்கோவன், ராதாகிருஷ்ணன், ரவிக்குமார், அசன் முகமது ஜின்னா ஆகியோரும் பங்கேற்றனர்.
கூட்டத்தின் முடிவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
- டெசோ மாநாட்டு தீர்மானங்கள் அடங்கிய மனுவை, மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு எம்.பி. ஆகியோர் ஐ.நா. மன்ற துணைப் பொதுச் செயலாளர் யான் லியாசனிடமும், ஐ.நா. மன்ற மனித உரிமை ஆணையத் தலைமை ஆணையர் நவநீதம் பிள்ளையிடமும் நேரில் சென்று வழங்கினர். மனுவை பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ள ஐ.நா. அவையின் தலைமை பொறுப்பாளருக்கு ‘டெசோ' அமைப்பு தன் நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.
- ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைப் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பு நாடுகளான 47 நாடுகளின் இந்தியாவிற்கான தூதுவர்களையும், டெசோ சார்பில் நேரில் சந்தித்து, டெசோ மாநாட்டு தீர்மானங்களுக்கு ஆதரவாக ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைப் பாதுகாப்பு ஆணையத்தில் குரல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வதென கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
- 2009-ம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்காலில் சிங்கள அரசு நடத்திய இனப் படுகொலையின்போது, ஈழ மக்களைப் பாதுகாக்கவும், போரைத் தடுத்து நிறுத்தவும் வேண்டிய ஐ.நா. அதிகாரிகள் வெளியேறிய செய்தி, தற்போது வெளியாகியுள்ள ஐ.நா. உள் அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. ஐ.நா. அதிகாரிகளே வெளியேற வேண்டிய அளவுக்கு அச்சுறுத்திய சிங்கள அரசையும், அதன் அதிபர் ராஜபக்சேவையும் டெசோ வன்மையாக கண்டிக்கிறது.
- பிரிட்டன் தமிழர் பேரவையும், தமிழர்களுக்கான இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவும் இணைந்து லண்டன் நாடாளுமன்ற வளாகத்தில் நடத்திய மாநாட்டில், இலங்கை அரசு ஈழத் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்திய இனப்படுகொலை குறித்து சுதந்திரமான விசாரணை நடத்திட பல நாடுகள் கொண்ட குழு ஒன்றினை அமைக்க வேண்டும் என ஐ.நா. மன்றத்திற்கு வேண்டுகோள் விடுக்கும் தீர்மானமொன்றை நிறைவேற்றியுள்ளது. மேலும், டெசோ மாநாட்டு தீர்மானங்களை எதிரொலிக்கும் வகையிலும் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ள பிரித்தானிய தமிழ்ப் பேரவை மற்றும் தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவுக்கும் டெசோ அமைப்பு நன்றி தெரிவித்துக்கொள்கிறது.
ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அபத்த நாராயணசாமி
கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி, இலங்கை தமிழர் பிரச்சினையை தி.மு.க. உள்ளிட்ட மாநில கட்சிகள் அரசியல் ஆக்குவதாக மத்திய அமைச்சர் நாராயணசாமி சொல்லியிருந்தால் அது அபத்தமானது என்றார்.
மேலும் ஈழத் தமிழர் பிரச்சனை தொடர்பாக நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர உள்ளதாக திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர். பாலு கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications