மும்பை சிவாஜி பூங்காவில் பால் தாக்கரே நினைவகம் அமைக்க கடும் எதிர்ப்பு
மும்பை: பால்தாக்கரே வாழ்ந்த காலத்தில்தான் சர்ச்சைக்குரியவராக இருந்ததில்லை.. அவரது மரணத்துக்குப் பின்னரும் கூட தொடரும் சர்ச்சைகளின் நாயகனாகவே இருந்து வருகிறார்... எந்த ஒரு அரசுப் பொறுப்பும் வகிக்காத இந்தியாவின் பல மாநில மக்களுக்கு எதிராக துவேஷ கருத்துகளை விதைத்த பால்தாக்கரேவுக்கு அரசு மரியாதை கொடுப்பதா? என்ற கேள்விக்கான விடை கிடைத்துவிடவில்லை...இப்பொழுது "சிவசேனா உருவான மும்பை சிவாஜி பூங்காவில்.. பால்தாக்கரேயின் உடலை தகனம் செய்த இடத்திலேயே நினைவகம் அமைக்க வேண்டும்' என்ற கோரிக்கை அடுத்த சர்ச்சைக்கு அடித்தளம் போட்டிருக்கிறது...
மும்பை சிவாஜி பூங்கா. சுமார் 28 ஏக்கர் பரப்பளவு கொண்ட மைதானம்... மும்பைவாசிகளால் நேசிக்கப்படும் இடம்... இதனாலேயே இப்பகுதியை 'அமைதி மண்டலமாக' அறிவிக்கக் கோரி 2009-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. 2010-ம் ஆண்டு மே 5-ந் தேதி முதல் இந்த பூங்கா 'silence zone' ஆனது! கடந்த 17-ந் தேதி பால்தாக்கரே மறைந்த பிறகு அவரது உடல் இதே சிவாஜி பூங்காவில் தகனம் செய்யப்பட்டது! பல லட்சம் சிவசேனா தொண்டர்களை தாங்கக் கூடிய இடம் என்பதால் சிவாஜி பூங்கா மைதானத்தில் உடல் தகனம் செய்ய அனுமதிக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொள்ளும் மும்பைவாசிகள் தகனம் செய்யப்பட்டதாலேயே அதே இடத்தில் நினைவகம் கட்ட வேண்டும் என்பதை நிராகரிக்கிறார்கள்...
ஆவாஸ் பெளண்டேஷன் என்ற அமைப்ப்பின் செய்தி தொடர்பாளர் மோகனா நாயர் இது பற்றி கூறுகையில், சுற்றுச் சூழல் கேட்டை வேண்டுமென்றே அழைத்து வரும் நடவடிக்கைதான் சிவாஜி பூங்காவில் நினைவகம் அமைக்கக் கோருவது என்பது! ஆண்டுதோறும் சிவாஜி பூங்காவில் நடைபெறும் தசாரா கொண்டாட்டங்களைக் கூட வேறு மைதானத்துக்கு மாற்ற நீதிமன்றமும் உத்தரவிட்டிருக்கிறது. இந்நிலையில் தாக்கரேவின் நினைவகம் இந்த பூங்காவில் அமைக்கப்பட்டால் ஆண்டு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை சிவாஜி பூங்காவில் சிவசேனாவினர் நடத்த வாய்ப்பிருக்கிறது... என்கிறார்..
சிவாஜி பூங்கா மைதானத்தை அரசியல் கட்சிகள் பயன்படுத்த எதிர்ப்புத் தெரிவித்து வழக்கு தொடர்ந்த அப்பகுதியைச் சேர்ந்த அசோக் ராவத் கூறுகையில், சிவாஜி பூங்காவில் ஏற்கெனவே சிவாஜிக்கு நினைவகம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் அதே இடத்தில் மீண்டும் ஒரு நினைவகம் அமைப்பதா? ஏற்க முடியாது என்கிறார்.
இவர்களைப் பொறுத்தவரையில் சிவாஜி பூங்காவில் பால்தாக்கரேவின் நினைவகம் கட்டப்படுமேயானால், சிவாஜி பூங்காவை அந்த கட்சி கபளீகரம் செய்துவிடும் என்ற அச்சம்தான்! பால்தாக்கரேக்கு வேறு எங்கு வேண்டுமானாலும் நினைவகம் அமைத்துக் கொள்ளட்டும்.. சிவாஜி பூங்காவே வேண்டும் என்று வற்புறுத்தக் கூடாது என்ற மும்பைவாசிகளின் வலியுறுத்தல் குரலுக்கு செவிசாய்ப்பார்களா?
அப்ப திமுக உதயமான சென்னை ராயபுரம் ராபின்சன் பூங்கா... அதிமுக மாநாடு நடத்திய மதுரை தமுக்கம் மைதானம்.. இது எல்லாமே அந்த கட்சிகளுக்கே சொந்தமாகிடுமோ?












Click it and Unblock the Notifications