திருவாவடுதுறை ஆதீனம் மரணம் - புதிய ஆதீனம் பொறுப்பேற்பு
நாகப்பட்டனம்: திருவாவடுதுறை ஆதீனம் 23வது பட்டம் சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரியார் மரணமடைந்தார். இதையடுத்து 24வது ஆதீனமாக மீனாட்சிசுந்தர தேசிக பரமாசாரியார் பொறுப்பேற்றுள்ளார்.
மயிலாடுதுறை அருகே உள்ளது திருவாவடுதுறை ஆதீன மடம். இதன் 23வது பட்டமாக குருமகாசந்நிதானம் சிவப்பிரகாச தேசிக பரமாசாரிய சுவாமிகள் இருந்து வந்தார். இவர் இன்று அதிகாலையில் காலமானார்.
சமீபத்தில்தான் அவருக்கு இருதய அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சைக்குப் பின்னர் மடத்திற்குத் திரும்பினார். ஆனால் மீண்டும் நேற்று நள்ளிரவுக்கு மேல் உடல் நலக்குறைவு ஏற்படவே அவர் சிகிச்சைக்காக மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே காலமானார்.
தமிழ் வளர்த்த சைவ மடங்களில் தலையாயது திருவாவடுதுறை ஆதீனம். சுமார் 600 வருடங்களுக்கு முன்னர் தோன்றிய சைவ மடம். நெடிய பாரம்பரியமும் சிறப்பும் கொண்ட திருவாவடுதுறை ஆதீன மடத்தின் 23 வது பட்டத்தை அலங்கரித்தவர் சீர்வளர்சீர் சிவப்பிரகாச தேசிக பரமாசாரிய சுவாமிகள்.
அவரது மறைவைத் தொடர்ந்து 24வது ஆதீனமாக, திருவாவடுதுறை ஆதீன மடத்தின் கிளை மடமான திருவிடைமருதூர் ஆதீன தம்பிரானாக உள்ள சீர்வளர்சீர் மீனாட்சிசுந்தர தேசிக பரமாசாரிய சுவாமிகள் நியமிக்கப்பட்டார். இன்று அவர் தனது பொறுப்பை ஏற்றார்.












Click it and Unblock the Notifications