சி.பி.ஐ. புதிய இயக்குனர் நியமனத்துக்கு பாஜக கடும் எதிர்ப்பு

1974ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக பீகாரில் சேர்ந்த சின்ஹா, தற்போது இந்தோ திபெத் எல்லை பாதுகாப்புப் படையின் டிஜிபியாக உள்ளார். 37 ஆண்டுகள் ஐபிஎஸ் பணியில் இருந்துள்ள ரஞ்சித் சின்ஹா, சிபிஐ, ரயில்வே பாதுகாப்புப் படை, லஞ்ச ஒழிப்புத் துறை போன்ற பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். தற்போது சிபிஐ இயக்குனராக உள்ள ஏ.பி.சிங் நவம்பர் 30 ம் தேதியுடன் ஓய்வு பெற உள்ளதையடுத்து, மத்திய கண்காணிப்பு ஆணையர் தலைமையிலான தேர்வுக் குழு, மூன்று அதிகாரிகளின் பெயர்களை இப்பதவிக்கு பரிந்துரைத்து இருந்தது. இதில் இருந்து, ரஞ்சித் சின்ஹாவை பிரதமர் தலைமையிலான நியமனக் குழு சிபிஐ இயக்குனராக நியமித்துள்ளது.
ஆனால் இந்த நியமனத்தை திரும்பப் பெற வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக பாஜகவின் மக்களவைத் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், மாநிலங்களவைத் தலைவர் அருண்ஜேட்லி ஆகியோர் பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், இத்தகைய நியமனங்களை பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழுதான் நியமிக்க வேண்டும் என்று லோக்பால் மசோதா மீதான ராஜ்யசபா நிலைக்குழு பரிந்துரைத்துள்ளதை சுட்டிக்காட்டி இத்தகைய நியமனங்களை அத்தகைய குழு மூலமே நியமிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications