திமுகவின் 'இரும்பு மனிதர்' வீரபாண்டி ஆறுமுகம்... 54 ஆண்டு அரசியலில் சில சுவடுகள்!

தனது 54 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் அவர் சந்தித்த சோதனைகள் கொஞ்சமல்ல.
இன்று முரசொலி வெளியிட்டுள்ள வீரபாண்டியாரின் அரசியல் வாழ்க்கை சுவடுகளிலிருந்து சில பகுதிகள்...
1955ஆம் ஆண்டில் திமுகவில் உறுப்பினராக சேர்ந்து, 1956ஆம் ஆண்டு பூலாவாரி கிளைக்கழக செயலாளராக, வட்டக் கழகப் பரிதிநிதியாக, மாவட்டக் கழகப் பிரதிநிதியாக, பின்னர் தலைமைச் செயற்குழு உறுப்பினராக, பொதுக்குழு உறுப்பினராக இருந்து 1974ஆம் ஆண்டு முதல் சேலம் மாவட்டக் கழகச் செயலாளராகப் பொறுப்பேற்று, தொடர்ந்து 38 ஆண்டு காலமாக திமுகவில் பணியாற்றி வந்த வீரபாண்டி எஸ்.ஆறுமுகம், சேலம் மாவட்டம், பூலாவரியில் சோலை - சின்னம்மாள் தம்பதியினருக்கு மகனாக 26.01.1939ஆம் ஆண்டு பிறந்தார்.
1963ல் அண்ணா தலைமையில் நடைபெற்ற விலைவாசி உயர்வு எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்று மூன்று மாத சிறைவாசம் கோவை சிறையிலும், அரசு அலுவலகங்களில் இந்தி கட்டாயமாக்கப்படுவதைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்று மூன்று மாத சிறைவாசம் கோவை சிறையிலும், 1981, 1985, 1987 ஆகிய ஆண்டுகளில் இலங்கைத் தமிழர்களுக்காகவும் 1986ல் சட்ட நகல் எரிப்புப் போராட்டம் என திமுக அறிவித்த அனைத்துப் போராட்டங்களிலும் தலைமையேற்று கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்தவர்.
1976ஆம் ஆண்டு பிப்ரவரி 6ஆம் நாள் தனது மூத்த மகள் மகேஸ்வரியின் திருமணம் நடந்தது. திருமணம் நடந்து முடிந்த சற்று நேரத்திற்குள்ளாக இவர் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, பல்வேறு வழக்குகளில் சேலம் சிறையில் வைக்கப்பட்டார். ஆறுமாத காலம் சேலம் சிறையிலும், பின்னர் எட்டுமாத காலம் மதுரை சிறைக்கும் மாற்றப்பட்டார்.
கையில் விலங்குச் சங்கிலி
சேலம் சிறையில் இருந்தபோது மத்திய உளவுத்துறையும், தமிழக காவல்துறையும், வருமான வரித்துறை உயர் அதிகாரிகளும் இவரை அழைத்து திமுக தலைவர் கலைஞர் குறித்து பொய்யான வாக்குமூலம் அளிக்க வற்புறுத்தினர். அதற்கு இவர் ஒப்புக்கொள்ளாத காரணத்தினால் சேலம் சிறையில் இருந்து மதுரை சிறைக்கு மாற்றப்பட்டார்.
அப்போது சேலம் சிறைச்சாலையில் இருந்து மதுரை சிறைச்சாலை வரை கையில் விலங்கு மாட்டி, அமர்கின்ற இருக்கைப் பலகையில் விலங்குச் சங்கிலியைப் பூட்டி வைத்தார்கள். பிறகு இவர் மீது போடப்பட்ட பல்வேறு வழக்குகளுக்கு மதுரையில் இருந்து சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய நகரங்களில் உள்ள நீதிமன்றத்திற்கு அழைத்து செல்கிறபோதெல்லாம் இவரை கையில் விலங்குச் சங்கிலி போட்டே அழைத்துச் சென்றனர்.
1976ஆம் ஆண்டு பிப்ரவரி 6ஆம் நாள் வீரபாண்டி ஆறுமுகம் மூத்த மகள் மகேஸ்வரியின் திருமணம் நடந்தது. திருமணம் நடந்து முடிந்த சற்று நேரத்திற்குள்ளாக வீரபாண்டி ஆறுமுகம் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
தாயார் மீது சாராய வழக்கு..
வீரபாண்டி எஸ்.ஆறுமுகம் கைது செய்து சிறையில் இருந்தபோது, புதுமணத் தம்பதிகளான இவரது மகள் மகேஸ்வரி மற்றும் மருமகன் காசி ஆகியோரை விசாரணைக்கென துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று வாரக்கணக்கில் வைத்து துன்புறுத்தினார்கள்.
அதோடு, இவரது தாயார் சின்னம்மாள் சாராயம் விற்றுக் கொண்டிருந்தார் என அவருடைய தலைக்கு மேல் சாராயத்தை வைத்து ஐந்து கிலோ மீட்டர் நடத்தியே அழைத்துச் சென்று பொய் வழக்கு போட்டனர்.
மனைவியை சித்திரவதை செய்த போலீஸ்
இவரது மனைவி அரங்கநாயகியை துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு மாதக் கணக்கில் வைத்து சித்திரவதை செய்தனர். வீரபாண்டி ஆறுமுகத்தின் மீது போடப்பட்ட வழக்கின் சாட்சிகளை கலைத்து விடுவார் என்று கூறி, இவருடைய சகோதரி பாப்பாத்தியையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவர் மிசாவில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தபோது, இவருடைய வீட்டிற்கு யாரும் வரக்கூடாது என்று காவல்துறை அதிகாரிகள் வீட்டுக்கு வந்தவர்களை விரட்டியதோடு, அதையும் மீறி வீட்டிற்கு வந்தவர்கள் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மத்திய அரசு சேலத்தில் இரயில்வே கோட்டம் அமைக்கப்படும் என்று முதலில் அறிவித்து பின்னர் அதனை தவிர்க்க முடிவெடுத்தபோது, மத்திய அரசு அறிவித்தவாறு சேலம் கோட்டம் அமைத்தே தீர வேண்டும் என வலியுறுத்தி, இரயில் நிறுத்தப் போராட்த்தை இவர் தலைமையேற்று நடத்திய பின்னரே சேலம் இரயில்வே கோட்டம் அறிவிக்கப்பட்டு, உருவாக்கப்பட்டது.
இவரது கொள்கைப் பிடிப்பினையும், திமுகவுக்கு உரமூட்டும் உழைப்பினையும் பாராட்டிடும் வகையில் திமுக சார்பில் 20.09.2012 அன்று நாகர்கோவிலில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் இவருக்கு திமுக தலைவர் கலைஞர் பெரியார் விருதினை வழங்கிச் சிறப்பு செய்தார்.
நன்றி: முரசொலி












Click it and Unblock the Notifications