சிகரெட் பிடித்ததை காட்டிக் கொடுத்த ஆசிரியர்: 5 ஆண்டுகள் காத்திருந்து துப்பாக்கியால் சுட்ட வாலிபர்
அகமதாபாத்: சிகரெட் பிடித்ததை அப்பாவிடம் சொன்னதற்காக 5 ஆண்டுகள் காத்திருந்து ஆசிரியரை சரமாரியாக துப்பாக்கியால் சுட்ட வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
குஜராத் மாநிலம் தகிகாம் நகரை சேர்ந்தவர் குர்னால் ஷா (35). பள்ளி மாணவர்களுக்கு டியூஷன் சொல்லி கொடுத்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு குஜராத்திய புத்தாண்டு கொண்டாடப்பட்டது. அப்போது ஷாவிடம் படிக்கும் மாணவர்கள் அவரை சந்தித்து பரிசுகள் கொடுத்தனர். அப்போது ஆமின் என்ற 22 வயது வாலிபர், ஷா வீட்டுக்கு வந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தான். பின்னர், ‘நான் உங்கள் பழைய மாணவன். என்னை அடையாளம் தெரிகிறதா என கேட்டார்.
ஷா யோசித்து கொண்டிருந்தபோதே, 5 வருடங்களுக்கு முன்பு, உங்களிடம் படித்தபோது நான் சிகரெட் பிடித்ததை என் அப்பாவிடம் காட்டிக் கொடுத்து என் வாழ்க்கையையே அழித்தீர்களே என்று கூறியபடி தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ஷாவை நோக்கி சரமாரியாக சுட்டார். இதில், வயிற்றில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் அவர் கீழே சரிந்தார்.
இதைப்பார்த்த ஷாவின் மனைவி பூமிகா, அதிர்ச்சியடைந்தார். ஆமினை நோக்கி பாய்ந்து துப்பாக்கியை பிடித்துக் கொண்டு போராடினார். இதனால் மீதி குண்டுகள் ஷா மீது பாயாமல் சுவர்களில் துளைத்தன. பின்னர் ஆமீன் ஓடி விட்டார். ஷாவை மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சைக்கு பிறகு அவர் உயிர் பிழைத்தார்.
5 வருடங்களுக்கு முன்பு ஆமின் + 1 படித்து கொண்டு இருந்தபோது ஷாவிடம் டியூஷன் சேர்ந்துள்ளான். டியூஷனுக்கு மட்டம் போட்டு விட்டு சிகரெட் பிடித்துள்ளான் ஆமின். இதை பார்த்த ஷா ஆமின் தந்தையிடம் மகனின் நடத்தையைப் பற்றி சொல்லவே, அதுவரை பாசமாக இருந்த தந்தை, பின்னர் ஆமினை திட்ட தொடங்கினார். செலவுக்கு பணம் கொடுக்காமல் மறுக்கவே சொந்த வீட்டிலேயே திருட தொடங்கினான் ஆமின். இதனையடுத்து அவனை வீட்டை விட்டே விரட்டினர் அவனுடைய பெற்றோர்கள். வசதியாக வாழ்ந்த ஆமின், வேலை தேடி அலைந்தார். சில வருடங்கள் ஆகியும் அவரது அப்பா சமாதானமாகவில்லை. இதற்கெல்லாம் காரணம் டியூஷன் ஆசிரியர் ஷாதான் என நினைத்த ஆமின் சந்தர்ப்பம் பார்த்து அவரை பழிவாங்கி உள்ளார் என தெரியவந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் ஆமினை கைது செய்து சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications