அன்னிய முதலீடு.. திமுக ஆதரவுக்காக உருவாக்கப்பட்டதா '2ஜி ஆர்.பி. சிங் டிராமா'!!

2ஜி விவகாரத்தில் ரூ1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக சொல்லப்பட்ட சிஏஜி அறிக்கை மீது முன்னாள் அதிகாரி ஆர்.பி.சிங் திடீரென புகார் கூறினார். முதலில் பாஜக மூத்த தலைவரும் நாடாளுமன்ற பொது கணக்குக் குழுத் தலைவருமான முரளி மனோகர் ஜோஷியின் தலையீட்டில்தான் ரூ1.76 லட்சம் கோடி இழப்பு என்று மிகைப்படுத்தப்பட்டதாக ஆர்.பி.சிங் கூறினார். இது பெரும் புயலைக் கிளப்பியது. இந்தப் புயல் வீசிய முதல் நாளே திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்கப் போகிறார் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில்சிபல் என்று கூறப்பட்டது.
2ஜி விவகாரத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டது திமுகதான். மத்திய அமைச்சர்களாக இருந்த ஆ.ராசா, தயாநிதி மாறன் ஆகியோர் அடுத்தடுத்து பதவி விலகினர். திமுக தலைவர் கருணாநிதியின் மகளான கனிமொழி சிறைக்குப் போக நேர்ந்தது. தமிழக சட்டசபை தேர்தலில் ஆட்சியையே பறிகொடுக்கவும் செய்தது திமுக. இதற்கு முக்கிய காரணமே 2ஜி தொடர்பான சிஏஜி அறிக்கையில் சொல்லப்பட்ட ரூ1.76 லட்சம் கோடி புகார்தான்!.
ஆர்.பி.சிங்கின் 'ஒப்புதல்' வாக்குமூலத்தால் தங்கள் மீதான ஊழல் கறை அகற்றப்படும் என்று திமுக நம்புகிறது.
பின்னர் கபில்சிபல் வருவதற்குள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், கருணாநிதியை சந்தித்துப் பேசுகிறார். அதன் பின்னர் கபில்சிபலுக்குப் பதிலாக மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத் சென்னை வந்து கருணாநிதியை சந்தித்துவிட்டுப் போகிறார்.
திமுகவும் சிஏஜியை வெளுத்துக் கட்ட இதுவே சந்தர்ப்பம் என்று கருதி சிஏஜி கட்டமைப்பு, ஆர்.பி.சிங். புகார் ஆகியவை குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தில் நோட்டீசும் கொடுத்திருக்கிறது. திமுகவைப் பொறுத்தவரை ஆர்.பி.சிங் விவகாரத்தால் 'கிளீன்' இமேஜ் கிடைத்துவிட்டது என நினைக்கிறது!.
'கிளீன் இமேஜ்' கிடைக்க உதவிய காங்கிரஸுக்கு பிரதிபலனாக என்ன செய்யும் திமுக?
"கொள்கை நிலைப்பாடு என்னவோ அன்னிய முதலீட்டை எதிர்ப்பது! நடைமுறை நிலைப்பாடு என்னவோ அன்னிய முதலீட்டைக் கொண்டு வரும் அரசை ஆதரிப்பது!" என்ற நிலைப்பாட்டை எடுத்திருப்பதே காங்கிரஸுக்கான திமுகவின் விலைமதிக்க முடியாத பிரதிபலன்!












Click it and Unblock the Notifications