செவ்வாய் கிரகத்தில் புழுதிப் புயல்: நாசாவின் ரோபோவுக்கு ஆபத்து

செவ்வாய் கிரகத்தில் 2 ஆண்டுகள் ஆய்வு மேற்கொள்ள நாசா கியூரியாசிட்டி என்னும் விண்கலத்தை அனுப்பியது. அது கடந்த ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி செவ்வாய் கிரகத்தில் இறங்கி தனது ஆய்வைத் துவங்கியது. செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருந்ததற்கான தடங்களை புகைப்படம் எடுத்து அனுப்பியது. இந்நிலையில் அங்கு வீசும் புழுதிப் புயலை படம்பிடித்து அனுப்பி வைத்துள்ளது.
இது குறித்து நாசா விஞ்ஞானி ரிச் ஜுரெக் கூறுகையில்,
புழுதிப் புயல் செவ்வாய் கிரகத்தின் பெரும்பாலான இடங்களில் வீசுகிறது. அதனால் பார்க்கும் இடமெல்லாம் புழுதியாகக் காட்சியளிக்கிறது. சில புழுதிப் புயல்கள் பெரிய அளவில் உருவெடுப்பதும், சில திடீர் என்று காணாமல் போவதும் ஏன் என்று ஆய்வு செய்து வருகிறோம். கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் செவ்வாய் கிரகத்தில் புழுதிப் புயல் வீசும் காலம் துவங்கியுள்ளது. கடந்த 16ம் தேதி செவ்வாய் கிரகத்தின் தட்பவெட்ப நிலை 25 டிகிரி அதிகரித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்த புயல் தொடர்ந்தால் நாசா செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பியுள்ள ரோபோவின் செயல்பாடுகள் பாதிக்கக்கூடும். புழுதிப் புயல் உயர எழுவதால் அது சூரியனின் வெப்பத்தை எடுத்துக் கொள்கிறது. புழுதி ரோபோவின் சோலார் பேனலில் படிவதால் அதனால் சூரிய வெப்பத்தை எடுக்க முடியாமல் போகும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications