அவதூறு வழக்கு: விஜயகாந்துக்கு தஞ்சை, கிருஷ்ணகிரி நீதிமன்றங்கள் சம்மன்
தஞ்சை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்குகளில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேரில் ஆஜராக தஞ்சை, கிருஷ்ணகிரி நீதிமன்றங்கள் சம்மன் அனுப்பியுள்ளன.
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிறந்த நாளை முனனிட்டு தஞ்சை, கிருஷ்ணகிரியில் அக்கட்சி சார்பில் ஆகஸ்ட் மாதம் 10 மற்றும் 19ம் தேதிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் தமிழக முதல்வர் ஜெயலலிதாவையும், தமிழக அரசையும் தரக்குறைவாகப் பேசியதாக கூறப்படுகின்றது.
இதனையடுத்து தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திலும், கிருஷ்ணகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்திலும் அரசு வழக்கறிஞர்கள் விஜயகாந்த் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் தஞ்சை நீதிமன்றத்தில் டிசம்பர் 11ம் தேதியும், கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் 17ம் தேதியும் விஜயகாந்த் நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப உத்தரவிட்டனர்.