போடியில் படிக்காத மகனை மிரட்ட விஷம் குடித்த பெண் பரிதாப சாவு
தேனி: போடியில் படிக்காத மகனை மிரட்ட விஷம் குடித்த பெண் பரிதாபமாக உயிர் இழந்தார்.
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குப்பிநாயக்கன்பட்டி குண்டாலீஸ்வரி கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாண்டியன். ஆட்டோ டிரைவர். அவரது மனைவி மணிமாலா (35). அவர்களுக்கு அருண்பாண்டி (14) என்ற மகனும், அருணாதேவி (12) என்ற மகளும் உள்ளனர்.
அதே பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் அருண்பாண்டிக்கு படிப்பு மீது கவனம் இல்லாமல் இருந்துள்ளது. இதனால் மணிமாலா தனது மகனை ஒழுங்காக படிக்குமாறு கண்டித்தும், அவ்வப்போது அறிவுரை வழங்கியும் வந்துள்ளார். ஆனால் அருண்பாண்டி தாய் பேச்சைக் கேட்காமல் படிப்பில் கவனம் செலுத்தாமல் நண்பர்களுடன் ஊர் சுற்றி வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று மாலை மணிமாலா அருண்பாண்டியை ஒழுங்காக படிக்க வேண்டும் என்று கண்டித்துள்ளார். அப்போது மகனை மிரட்ட நினைத்த அவர் நீ நன்றாக படிக்காவிட்டால் நான் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறியதோடு மட்டுமல்லாமல் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்தும் விட்டார். பூச்சி மருந்தை குடித்த சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை தேனி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.