ஏட்டய்யா, என் குட்டியைக் காணோம்.. 'புகார்' கொடுத்த நாய்!
கன்னியாகுமரி: நாய் ஒன்று தனது குட்டியை மீட்டுத் தரக் கோரி காவல் நிலையம் சென்று போலீசாரின் உடையை கவ்வி கண்ணால் புகார் கொடுத்துள்ளது.
இன்று பத்து மாதம் சுமந்து பெற்ற குழந்தையை தாய் சிற்றின்பத்திற்கு இடையூறு என நினைத்து கொலை செய்யும் சம்பவங்களும், குழந்தை பிறந்தவுடன் குழந்தையை மருத்துவமனையில் தவிக்கவிட்டு விட்டு தாய் ஓடும் துயர சம்பவங்களும் ஆங்காங்கே அரங்கேறி வருகிறது.
இப்படிப்பட்ட தாய்மார்கள் இருக்கும் இந்த காலகட்டத்தில் குமரி மாவட்டம் புதுக்கடை பகுதியில் பழமையான காவல் நிலையம் உள்ளது. இந்த காவல் நிலைய வளாகத்திற்கு ஒரு பெண் நாய் வந்துள்ளது. போலீசாரும் இந்த நாய்க்கு பெமி என பெயரிட்டு வளர்த்து வந்தனர்.
இந்நிலையில் நாய் கருவுற்று, அண்மையில் ஐந்து குட்டிகளை போட்டுள்ளது. காவல் நிலையத்திற்கு வரும் பார்வையாளர்கள் நான்கு குட்டிகளை எடுத்துச் சென்றனர். மீதமுள்ள ஒரு குட்டியை பெண் துப்புரவு பணியாளர் எடுத்து சற்று தூரத்தில் உள்ள ஒரு வீட்டில் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் தனது கடைசிக் குட்டியைக் காணாமல் தவித்த தாய் நாய், மோப்பம் பிடித்து துப்புரவு பணியாளர்தான் தன் குட்டியை எடுத்து சென்றார் என்பதை உறுதி செய்தது. இதையடுத்து அந்த நாய் துப்புரவு பணியாளரிடம் சென்று அவரது சேலையை கவ்வி குட்டியைத் தருமாறு செய்கை காட்டியது. எனினும் எந்த பயனும் இல்லை.
இதையடுத்து காவல் நிலையத்தில் பணிபுரியும் போலீசாரிடம் சென்று அவர்களது உடையைக் கவ்வி தன் குட்டியை மீட்டுத் தர கண்ணீர் வடித்தது. நாயின் பாசத்தை கண்டு போலீசார் மெச்சினர்.
இதையடுத்து துப்புரவுத் தொழிலாளரைக் கூப்பிட்ட போலீஸார், பேசாம குட்டியை அதோட தாய்க்கிட்ட கொடுத்துடும்மா என்று கூற, அவரும் குட்டயை தாயிடம் கொடுத்து விட்டார்.
அடேங்கப்பா... பிரிந்து போன குட்டியை மீண்டும் பார்த்தவுடன் தாய் நாய் வடித்த ஆனந்த கண்ணீரைப் பார்க்கனுமே.... ஒரு நாய் தன் குட்டியை மீட்டுத் தர போலீசாரின் உடையை கவ்வி புகார் கொடுத்தது அனைவரையும் வியப்படையச் செய்தது.












Click it and Unblock the Notifications