"பெரிய பதவி"யில் நரேந்திர மோடி அமர வேண்டும்: - திக்விஜய்சிங்குக்கு அத்வானி பதிலடி
காந்திநகர்: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி இன்னும் பெரிய பதவிகளில் அமர வேண்டும்.. அப்போது கட்சியின் மூத்த தலைவர்கள் அவரை ஆதரிக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் அத்வானி புகழாரம் சூட்டியுள்ளார்.
நாட்டின் பிரதமராவதற்கு பொருத்தமானவர் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி என்று பாஜக மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் புகழ்ந்து தள்ளி பெரும்பரப்பை ஏற்படுத்தியிருந்தார். இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானியின் கருத்து என்ன காங்கிரஸ் பொதுச்செயலர் திக்விஜய்சிங் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் குஜராத்தின் காந்தி நகர் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அத்வானி, நரேந்திர மோடி இன்னும் பெரிய பொறுப்புகளில் அமர வேண்டும். ஒரு குடும்பத்தில் இளையவர் தலைமைப் பொறுப்பை ஏற்கும் போது மற்றவர்கள் அதை ஏற்க வேண்டும். தமது திறமையால் முன்னேறிய இளையவரை ஊக்கப்படுத்த வேண்டும் என்று அதிரடியாகப் பேசியிருக்கிறார்.
மேலும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்திய நரேந்திர மோடி ஒரு முன்மாதிரியாக திகழ்கிறவர் என்றும் அத்வானி பாராட்டியிருக்கிறார்.
இதேபோல் பாஜகவின் மற்றொரு மூத்த தலைவரான அருண்ஜேட்லியும் கூட, மோடி பிரதமராக வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பது இயற்கையானதே என்று ஒரேபோடாக போட்டிருக்கிறார்.
பாஜகவில் பிரதமர் பதவிக்கான வேட்பாளர்களாக கருதப்படும் சுஷ்மா ஸ்வராஜ், அத்வானி மற்றும் அருண் ஜேட்லி உள்ளிட்டோர் அனைவருமே மோடியை பாராட்டி, ஆதரவாக கருத்து தெரிவித்திருப்பது காங்கிரஸ் கட்சியை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
பாஜகவின் 'பிரதமர்' வேட்பாளராக நரேந்திர மோடி நிறுத்தப்பட்டால் அதை ஏற்கமாட்டோம் என்று தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தளம் ஏற்கெனவே திட்டவட்டமாக அறிவித்திருக்கிறது. இந்நிலையில் ஒட்டுமொத்த பாஜக தலைவர்களுமே நரேந்திர மோடியையே முன்னிறுத்துவதால் அரசியல் கூட்டணிகளில் மாற்றம் ஏற்படக் கூடிய ஒரு நிலை உருவாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications