மகளுக்கு பாலியல் தொந்தரவு: தட்டிக்கேட்ட எஸ்.ஐ.யை சுட்டுக் கொன்ற அகாலி தள தலைவர்
அமிர்தசரஸ்: தனது மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்த சிரோண்மணி அகாலிதளத்தைச் சேர்ந்த உள்ளூர் தலைவரை தட்டிக்கேட்க சென்ற துணை எஸ்.ஐ. ரவீந்தர்பால் சிங் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸைச் சேர்ந்தவர் துணை எஸ்.ஐ. ரவீந்தர்பால் சிங். அவரது மகளை அதே பகுதியைச் சேர்ந்த சிரோண்மணி அகாலிதள உள்ளூர் அமைப்பின் பொதுச் செயலாளர் ரஞ்சித் சிங் ராணாவும், அவரது உதவியாளர்கள் இருவரும் அடிக்கடி பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளனர். இது குறித்து அறிந்த ரவீந்தர்பால் ஆத்திரமடைந்தார். இதையடுத்து இந்த விவகாரத்திற்கு ஒரு முடிவு கட்ட நினைத்த அவர் தனது மகளை அழைத்துக் கொண்டு ராணாவை சந்திக்கச் சென்றார்.
அங்கு அவர் ராணாவை கண்டித்துள்ளார். இதையடுத்து ராணா தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டதில் ரவீந்தர்பாலின் காலில் குண்டு பாய்ந்தது. இந்த துப்பாக்கிச்சூட்டில் அவரது மகளும் காயம் அடைந்தார். இதையடுத்து மருத்துவமனைக்கு செல்லும் வழியில் வந்த ராணா ரவீந்தர்பாலின் மார்பில் சுட்டார். இதில் அவர் பரிதாபமாக உயிர் இழந்தார். இந்த சம்பவம் செஹ்ஹர்டா காவல் நிலையத்திற்கு மிக அருகில் நடந்தது.
இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு பல முறை தகவல் கொடுத்தும் அவர்கள் உரிய நேரத்தில் வரவில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதற்கிடையே ராணா தனது பண்ணை வீட்டில் தலைமறைவாக இருந்தார். இந்நிலையில் இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் இன்று காலை ராணாவை கைது செய்தனர். மேலும் ராணா அகாலிதளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஆனால் அவரது உதவியாளர்கள் தலைமறைவாகிவிட்டனர்.












Click it and Unblock the Notifications