தெலுங்கானா தொடர்பாக 28-ந் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம்- மத்திய அரசு ஏற்பாடு!

தெலுங்கானா தனி மாநிலக் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் எதிர்வரும் ஆந்திர மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்திக்கும் என்பது அப்பகுதி காங்கிரஸ் கட்சியினரின் கருத்து.
இதனாலேயே சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு விவகாரத்தால் மத்திய அரசுக்கு நெருக்கடியான சூழ்நிலை உருவானபோது காங்கிரஸ் எம்.பி.க்களே அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருந்தனர். மேலும் தாங்கள் அனைவரும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியில் இணைந்துவிடுவோம் என்றும் மிரட்டியிருந்தனர்.
இந்நிலையில் தெலுங்கானா பகுதி காங்கிரஸ் எம்.பிக்களாண மது யாக்ஷி கெளட் மற்றும் பொன்னம் பிரபாகரன் ஆகியோர் நேற்று உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேவை சந்தித்துப் பேசினர். இச்சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இருவரும் தெலுங்கானா தொடர்பாக வரும் 28-ந் தேதி காலை டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டியுள்ளது என்று தெரிவித்தனர்.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளப் போவதாக தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி அறிவித்திருக்கிறது. ஆனால் மாநில அரசு தெளிவான நிலையை அறிவிக்காததால் தெலுங்குதேசம் கட்சி இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமா என்பது உறுதியாகத் தெரியவில்லை.
மத்திய அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவதும் ஆந்திர மாநில கட்சிகள் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பதும்தான் தெலுங்கானா விவகாரம் முடிவுக்கு வராததற்கு காரணம் என்று மத்திய அரசு தொடர்ந்து புகார் கூறி வரும் நிலையில் மீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது.. விடிவு கிடைக்குமா? எனப் பார்ப்போம்!












Click it and Unblock the Notifications