புதிய பொலிவுடன் எம்.ஜி.ஆர். நினைவிடம்: ஜெயலலிதா திறந்து வைத்தார்

அ.தி.மு.க. நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் நினைவிடம் மெரினா கடற்கரையில் 8.25 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதன் நுழைவு வாயில் முகப்பையும், முன்பக்கச் சுற்றுச்சுவரை புதுப்பிக்கவும் ரூ.8 கோடியே 90 லட்சம் கடந்த ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனையடுத்து எம்.ஜி.ஆர். நினைவிடத்தின் முகப்பு வாயில் புதுப்பொலிவுடன் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.
பறக்கும் குதிரை இரட்டை இலை
60 அடி உயரத்தில் பிரமாண்டமான 4 தூண்கள் எழுப்பப்பட்டு அவற்றுக்கு நடுவில் பளிங்கு கல் மேடையில் இரட்டை இலை சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு கால்களை தூக்கியபடி கம்பீரமாக நிற்கும் வெண்கலத்தாலான பறக்கும் குதிரை சிலை அமைக்கப்பட்டு இருக்கிறது.
சமாதியினை சுற்றிலும், கிதார் வடிவில் புதிய நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் 18 மீட்டர் விட்டம் கொண்ட இரண்டு பர்கோலாஸ் இருக்கை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக இரண்டு சாய்வு நடைபாதைகள் அமைக்கப்பட்டு உள்ளன.இதுதவிர, நினைவிடத்தின் இரண்டு பக்கங்களின் ஓரங்களிலுள்ள நடைபாதைகள் கான்கீரிட் ஓடுகளாலும், பேவர் பிளாக்குகளாலும் அமைக்கப்பட்டு இருக்கின்றன. மத்தியில் அமைந்துள்ள புல்வெளியின் நடுவில் செயற்கை நீரூற்று ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது.
நினைவிடம் புதுப்பிக்கும் பணி முடிவடைந்ததை ஒட்டி ஞாயிறன்று பிற்பகல் எம்.ஜி.ஆர் நினைவிடத்தை பொதுமக்கள் பார்வைக்காக முதல்வர் ஜெயலலிதா திறந்துவைத்தார். அதன்பிறகு, எம்.ஜி.ஆர். சமாதிக்கு சென்று மலர் வளையம் வைத்து வணங்கினார்.அங்கு தயாராக நிறுத்தப்பட்டு இருந்த பேட்டரி காரில் அமர்ந்து, புதிதாக அமைக்கப்பட்டுள்ள புல்வெளிகளையும், செயற்கை நீர்வீழ்ச்சிக்களையும், பார்வையிட்டார்.
இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில், தமிழக அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.












Click it and Unblock the Notifications