மாணவன் செய்த தவறுக்காக பெற்றோரைத் தண்டித்த தலைமை ஆசிரியர்!
சேலம்: மாணவன் செய்த தவறுக்காக அவனது பெற்றோரை தினசரி பள்ளிக்கு வரவழைத்து விசாரணை என்ற பெயரில் வெறுமனே உட்கார வைத்து அனுப்பி சித்திரவதை செய்ததாக பள்ளித் தலைமை ஆசிரியர் மீது புகார் எழுந்துள்ளது.
சேலம் சூரமங்கலம் பகுதியில் ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. அதில் ஜூல்பிகர் அலி என்ற மாணவன் 8ம் வகுப்பு படித்து வருகிறான். ஒரு வாரத்துக்கு முன்பு பள்ளியிலிருந்து பள்ளிக்குச் சொந்தமான பந்தை அலி எடுத்துச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தலைமை ஆசிரியரிடம் புகார் போனது. அவர் அலியைக் கூப்பிட்டு விசாரித்தார்.
இதையடுத்து அலியின் தாய், தந்தையை விசாரணைக்காக அடுத்த நாள் காலை அழைத்துள்ளார் தலைமை ஆசிரியர்.அவர்களும் வந்தனர். ஆனால் விசாரணை எதுவும் இல்லாமல் மாலை வரை உட்கார வைத்து அனுப்பி விட்டார் தலைமை ஆசிரியர். இதேபோல தினசரி செய்துள்ளாராம். அதாவது மாணவனைத் தண்டிப்பதற்குப் பதில் அவனுடைய பெற்றோரை இப்படி நூதனமாக தண்டித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி ஈஸ்வரனுக்குப் புகார்கள் போனது. இதையடுத்து கல்வி அலுவலர் கலீல் முகம்மது பள்ளிக்கு வந்து நேரில் விசாரணை நடத்தினார். விசாரணையின்போது மாணவனின் பெற்றோரை தான் தணடிக்கவில்லை என்றும் விசாரணைக்காக அழைத்ததாகவும் கூறியுள்ளார் தலைமை ஆசிரியர். மேலும் தலைமை ஆசிரியர் தனது செயலுக்காக வருத்தம் தெரிவித்ததாகவும் தெரிகிறது.












Click it and Unblock the Notifications