சினிமா இயக்குநர் கொடுத்த புகார்.. கலாநிதி மாறன் மீது 4 பிரிவுகளில் வழக்கு

சமீபத்தில் ஷக்தி சிதம்பரம் ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்தார். அதில், நடிகர் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் திரைப்படத்தின் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட விநியோக உரிமையைத் தருவதாக சன் குழும நிறுவனத்தினர் ரூ. 4 கோடி பெற்றுக் கொண்டனர். ஆனால், அந்தப் படத்தின் உரிமத்தை எனக்குத் தரவில்லை. இதனால் நான் கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்டு வந்தேன். ஆனால் அவர்கள் பணத்தையும் திருப்பித் தராமல் இழுத்தடித்து வந்தனர்.
இதே போல நடிகர் விஜய் நடித்த காவலன் திரைப்படத்தின் சாட்டிலைட் சேனல் உரிமம் பெற்றதில் சன் குழும நிறுவனம் எனக்கு ரூ. 2.75 கோடி தர வேண்டியிருந்தது. எனக்கு தர வேண்டிய பாக்கித் தொகையை கேட்டு கடந்த மாதம் 30-ம் தேதி சன் குழும நிறுவனத்தின் அலுவலகத்துக்கு சென்றேன். அப்போது அங்கிருந்தவர்கள் என்னைத் திட்டி, மிரட்டினர்.
எனக்கு பணத்தை தராமல் திட்டி மிரட்டிய அந்த நிறுவனத்தின் தலைவர் கலாநிதி மாறன், தினகரன் பத்திரிக்கை பதிப்பாளர் ஆர்.எம்.ஆர்.ரமேஷ், சன் குழும நிறுவனத்தின் ஊழியர்கள் கண்ணன், செம்பியன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்தப் புகாரை பரிசீலித்த மத்திய குற்றப் பிரிவு போலீஸார் புகாருக்குள்ளான நால்வர் மீதும் மிரட்டல், கொலை மிரட்டல் விடுத்தல், தகாத வார்த்தைகளால் திட்டுதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இதேபோல, சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த தியேட்டர் உரிமையாளர் நரேஷ்குமார் என்பவர், சன் குழும நிறுவனத்தினர், தன்னிடம் ரூ. 25 லட்சம் மோசடி செய்ததாகக் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர்கள் 4 பேர் மீதும் நம்பிக்கை மோசடி, தகாத வார்த்தைகளால் திட்டியது, மிரட்டியது, கொலை மிரட்டல் ஆகிய 4 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
முன்ஜாமீன் கோரும் கலாநிதி மாறன்
ஷக்தி சிதம்பரம் வழக்கில் கைதாவதைத் தவிர்க்க கலாநிதி மாறன் உள்ளிட்ட நான்கு பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரியுள்ளனர்.
இந்த மனுக்கள் நேற்று நீதிபதி ஆறுமுகச்சாமி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணைய 18ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்ட நீதிபதி அதுவரை யாரையும் கைது செய்யவோ, தொந்தரவு செய்யவோ, சம்மன் அனுப்பவோ கூடாது என்று உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications