இந்தியாவுக்கு குத்தகைக்குக் கொடுக்கப்பட்ட எண்ணெய் கிடங்குகளைப் பறிக்கிறது இலங்கை!
முதலாம் உலகப் போர் காலத்தில் இங்கிலாந்து கடற்படை கப்பல்களுக்கு எண்ணெய் விநியோகிக்க திருகோணமலையில் பிரம்மாண்டமான கிடங்குகள் அமைக்கப்பட்டன. இதில் 99 எண்ணெய் கிடங்குகளை 2002-ம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இலங்கை அரசு இந்தியாவுக்கு நீண்டகால குத்தகைக்குக் கொடுத்தது. இந்த கிடங்குகளில் சுமார் 12,100 மெட்ரிக் டன் எண்ணெய் சேகரிக்க முடியும். மத்திய கிழக்கு நாடுகளுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே இருக்கக் கூடிய மிகப் பெரிய எண்ணெய் கிடங்கு இது.
இதனால் திருகோணமலை துறைமுகம் இந்தியாவின் வசம் இருந்து வந்தது. திருகோணமலை துறைமுகம் யார் வசம் இருக்கிறதோ அவர்கள்தான் தென்னாசிய அரசியலைத் தீர்மானிப்பவர்கள் என்ற சொல் ஆயிரமாண்டுகாலமாக இருந்து வருகிறது. இதனால் இந்தியாவுக்கு இது சாதகமாக இருந்து வருகிறது,
இந்த நிலையில் தற்போதைய மகிந்த ராஜபக்ச அரசாங்கமோ, ரணில் அரசாங்கம் சட்டப்பூர்வமாக இந்தியாவுக்கு இந்த கிடங்குகளைக் கொடுக்கவில்லை என்று கூறி இவற்றைப் பறிக்க முடிவு செய்திருக்கிறது.