மதிமுக கொடுத்த வீடு, காரை நாஞ்சில் சம்பத் திருப்பித் தர வேண்டும்: நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்
நாகர்கோவில்: மதிமுகவில் இருந்து அதிமுகவில் சேர்ந்த நாஞ்சில் சம்பத் கட்சி கொடுத்த காரையும், வீட்டையும் திருப்பித் தர வேண்டும் என்று மதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
குமரி மாவட்ட மதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் செட்டிக்குளத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. மாநில தணிக்கை குழு உறுப்பினர் கோபால் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தில்லை செல்வம் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் சாகுல் ஹமீது, மாநில சட்டத் துறை துணை செயலாளர் வெற்றிவேல், நகர செயலாளர் ஜெரால்ட் ஹெக்டர் மற்றும் நிர்வாகிகள் மகாராஜன், அரிராம ஜெயம்,
ஷாஜி, ஜெயராஜ், சேம்ராஜ், ராமையா, சீனி, கபிரியல், ஆல்பர்ட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின் வருமாறு,
மதிமுக தொண்டர்களின் உழைப்பிலும், வியர்வையிலும் சம்பாதித்த பணத்தில் வாங்கப்பட்ட காரை திரும்பத் தருவதாக நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார். ஆனால் இதுவரை திருப்பித் தரவில்லை. எனவே அவர் காரை உடனடியாக திருப்பித் தர வேண்டும். இதே போல் சங்கரன்கோவிலில் செய்த அறிவிப்பின்படி அனைத்து மாவட்ட நிர்வாகிகள் மூலம் ரூ.48 லட்சம் வசூலிக்கப்பட்டு அவருக்கு வீடு கட்டி தரப்பட்டது. அந்த வீட்டையும் அவர் மதிமுகவுக்கு வழங்க வேண்டும்.
மது விலக்கு விழிப்புணர்வுக்காக உவரியிலிருந்து வைகோ நடைபயணம் தொடங்கியுள்ளார். வரும் 25ம் தேதி மதுரையில் இப்பயணம் நிறைவு பெறும். இதே நேரத்தில் அனைத்து மாவட்டங்களிலும் 17ம் தேதி முதல் 22ம் தேதி வரை வீடு வாரியாக மதுவிலக்கு விழிப்புணர்வு துண்டு
பிரச்சுரம் வழங்கவும், 17ம் தேதி முதல் 22ம் தேதி வரை களியக்காவிளையிலிருந்து கன்னியாகுமரி வரை வானகப் பிரச்சார பேரணி நடத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.












Click it and Unblock the Notifications