பெஷாவர் ஏர்போர்ட்டை ராக்கெட் வீசி தாக்கிய தாலிபான்கள்: 8 பேர் பலி
பெஷாவர்: பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள விமான நிலையத்தை தாலிபான்கள் ராக்கெட்டுகளை வைத்து தாக்கியதில் பொதுமக்கள் 3 பேர் மற்றும் 5 தீவிரவாதிகள் பலியாகினர். மேலும் பலர் காயம் அடைந்தனர்.
பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள பாச்சா கான் சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று இரவு 8.30 மணிக்கு தாலிபான் தீவிரவாதிகள் வந்துள்ளனர். துப்பாக்கிகள், ராக்கெட்டுகள் மற்றும் தங்கள் உடலில் குண்டுகளைக் கட்டிக் கொண்டு வந்த தீவிரவாதிகள் விமான நிலையத்திற்குள் நுழைய முயன்றனர். ஆனால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து அவர்கள் வெளியில் இருந்து கொண்டே 3 ராக்கெட்டுகளை விமான நிலயைத்தை நோக்கி செலுத்தி தாக்கினர். மேலும் 2 ராக்கெட்டுகள் அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்தது. இது தவிர தீவிரவாதிகள் வெடிகுண்டுகள் நிரப்பிய வாகனத்தை விமான நிலையத்தின் சுவரில் மோதி வெடிக்க வைத்தனர்.
இந்த தாக்குதலில் பொதுமக்கள் 3 பேரும், தற்கொலைப்படை தீவிரவாதிகள் 5 பேரும் பலியாகினர். மேலும் 40க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் கைபர் டீச்சிங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயம் அடைந்தவர்களில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
போலீசாருக்கும், தீவிரவாதிகளுக்கும் நடந்த துப்பாக்கிச்சூட்டில் தான் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு தெஹ்ரிக் இ தாலிபான் பொறுப்பேற்றுள்ளது. தீவிரவாதிகளின் தாக்குதலில் விமான நிலையச் சுவரில் ஆங்காங்கே சேதம் ஏற்பட்டாலும் விமானங்கள் பத்திரமாக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications