விவசாயிகளுக்கு 12 மணிநேரம் மும்முனை மின்சாரம்: சொன்னபடி கொடுத்தாரா ஜெ.- கருணாநிதி

இது குறித்து கருணாநிதி நாடாளுமன்ற திமுக உறுப்பினர்களுக்கு, குழுத் தலைவர் டி.ஆர். பாலு மூலமாக அனுப்பிய அறிக்கையில் கூறியிருப்பதாவது,
உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையின்படி தமிழக-கர்நாடக முதல்வர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் பேச்சுவார்த்தை ஒரு சில நிமிடங்களிலேயே முடிந்து நமது முதல்வர் அனைவரும் எதிர்பார்த்தவாறே வெறும் கையோடு திரும்பிவிட்டார். ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 12ம் தேதி திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாதததால் செப்டம்பர் 17ல் தான் திறந்தார்கள். திறந்தும் போதிய தண்ணீர் இல்லை. இந்த ஆண்டு குறுவை சாகுபடியே இல்லாத நிலையில் சம்பா சாகுபடியும் 24 லட்சம் ஏக்கரில் பயிரிடுவதற்குப் பதிலாக சுமார் 13 லட்சம் ஏக்கரில் மட்டுமே சாகுபடி நடந்துள்ளது. அந்தப் பயிர்களும் தண்ணீரின்றி வாடி, பயிர் கருகவும் ஆரம்பித்து விட்டது. வங்கியிலே நகை நட்டுகளை வைத்து கடன் வாங்கி நடவு செய்த விவசாயிகள் மனமுடைந்து போயுள்ளனர்.
ஆறு விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு மாண்டிருக்கிறார்கள். "விவசாயிகளின் கண்ணீரைத் துடைப்பதற்காக எனது ஆட்சியில் மும்முனை மின்சாரம் 12 மணி நேரம் வழங்கப்படும்" என்று முதலமைச்சர் பேரவையில் அறிவித்தார். ஆனால் மூன்று மணி நேரம் கூட மும்முனை மின்சாரம் வரவில்லை. ஆனால் தமிழக ஆட்சியாளர்களோ கேளாக்காதினராகத் தான் உள்ளனர். டிசம்பர் இறுதிக்குள் 30 டி.எம்.சி. தண்ணீர் தேவை என்று விவசாயிகள் கூறுகிறார்கள். காவிரி கண்காணிப்புக் குழுவும், உச்ச நீதிமன்றமும் 12 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளது. ஆனால் கர்நாடக அரசு இதற்கும் மறுத்துவிட்டது. இந்த நிலையில் விவசாயிகளின் கண்ணீர் துடைக்கப்பட்டாக வேண்டும். இனியும் விவசாயிகளின் தற்கொலைகள் தடுக்கப்பட்டாக வேண்டும்.
30 டி.எம்.சி. தண்ணீர் கொடுக்காவிட்டால், 45 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள மகசூல் பாதிக்கக் கூடிய அபாயம் இருப்பதாகச் செய்திகள் வருகின்றன. டெல்டா மாவட்டங்களை "பேரிடர் பாதித்த மாவட்டங்களாக" அறிவிப்பதற்கு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மின்வெட்டு, தண்ணீர் பற்றாக்குறை போன்ற காரணத்தால் கருகும் சம்பா பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு நாற்பதாயிரம் ரூபாய் வீதம் இழப்பீடு வழங்க வேண்டுமென்றும்; பட்ட கடன்களை ரத்து செய்திட வேண்டுமென்றும் அனைத்து விவசாய சங்கங்களும் கோரிக்கை வைத்துள்ளார்கள். இந்தக் கோரிக்கைகளைத் தமிழக அரசு ஏற்று விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற முன் வர வேண்டும். தற்கொலை செய்து கொண்டு இறந்த விவசாயிகளின் குடும்பங்களில் தலா ஒருவருக்கு அரசு வேலை கொடுக்க வேண்டுமென்றும் விவசாயச் சங்கத்தினர் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அதையும் தமிழக அரசு ஏற்க வேண்டும்.
அடுத்து கர்நாடக மாநிலத்தில் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிடக் கூடாது என்பதற்காக, அந்த மாநிலத்தைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரதமரைச் சந்தித்து முறையிடப்போவதாக செய்திகள் வந்துள்ளன. ஆனால் நாம் பெற்ற பேறு, அதற்கான முயற்சிகளோ, நடவடிக்கைகளோ எதுவும் தமிழகத்தில் அரசு சார்பில் நடைபெறுவதாக இல்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரதமரைச் சந்தித்து நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பினை ஒரு மாத காலத்திற்குள் அரசிதழில் வெளியிட வேண்டுமென்று கோரிக்கை வைக்க வேண்டுமென்று அறிக்கை விடுத்துள்ளார்கள்.
நெருக்கடியான இந்த நிலையில் தமிழகத்திலே அப்படிப்பட்ட முயற்சியினை தமிழக அரசு எடுக்கத் தவறிய நிலையில், கழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற குழு உறுப்பினர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பிரதமரைச் சந்தித்து, நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பினை அரசிதழிலே வெளியிட வேண்டுமென்று வலியுறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து டி.ஆர் பாலு தலைமையிலான திமுக எம்.பிக்கள் இன்று பிரதமரை சந்தித்து இது குறித்து வலியுறுத்தினர்.












Click it and Unblock the Notifications