தேனியில் போய் நிவாரணம் தேடுங்கள்.. விஜயகாந்த்துக்கு ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: தேனி செசன்ஸ் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி விஜயகாந்த் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தேனி மாவட்டத்தில் கடந்த மாதம் நடைபெற்ற தேமுதிக பொது கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் பேசினார். அப்போது தமிழகம் ஊழலில் முன்னணியில் இருப்பதாக கூறினார். இதனைத் தொடர்ந்து உண்மைக்குப் புறம்பாக தகவல்களை வெளியிட்டதாக விஜயகாந்த் மீது அவதூறு வழக்கை தமிழக அரசு தாக்கல் செய்தது.
இந்த வழக்கை தேனி செஷன்ஸ் கோர்ட் விசாரித்து, டிசம்பர் 19ம் தேதி கோர்ட்டில் ஆஜராகுமாறு விஜயகாந்த்துக்கு சம்மன் அனுப்பியது. இந்நிலையில் இந்த வழக்கை ரத்து செய்ய கோரி விஜயகாந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பால்வசந்தகுமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் இது தொடர்பாக தேனி கோர்ட்டில் நிவாரணம் தேடிக் கொள்ளுங்கள் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
இதனிடையே புதுக்கோட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு அவதூறு வழக்கை ரத்து செய்ய வேண்டும் என விஜயகாந்த் தனியாக ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பால்வசந்தகுமார், புதுக்கோட்டை வழக்குக்கு தடை விதித்து உத்தரவிட்டார். இது தொடர்பாக தமிழக அரசு 2 வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்யக்கோரி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications