'வாலன்டியராக' நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் வாங்கிய கே.என். நேரு!
திருச்சி: பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் சம்மன் அனுப்பாமலேயே நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் பெற்றிருக்கிறார் திமுகவின் முன்னாள் அமைச்சர் கே.என். நேரு.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் கடந்த 15-ந் தேதி பங்கேற்ற திமுக செயல்வீரர்கள் கூட்டத்துக்காக பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் பேனர்கள் வைத்திருந்ததாக கே.என். நேரு உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மீது திருச்சி மாநகராட்சி ஆணையர் தண்டபாணி போலீசில் புகார் கொடுத்தார்.
இதைத் தொடர்ந்து திமுக நிர்வாகிகள் 14 பேர் மீது 11 காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கே.என். நேரு மீது 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதனால் கே.என். நேரு மீண்டும் கைது செய்யப்படக் கூடும் என்று தகவல் பரவியது.
இதனால் தாமாகவே கே.என். நேரு உள்ளிட 6 பேர் திருச்சி ஜே.எம். நீதிமன்றத்தில் சரணடைந்தனர். ஆனால் போலீசார் இதை எதிர்பார்க்கவில்லை. வழக்குப் பதிவு செய்த போலீசார் எப்.ஐ.ஆர். போடவும் இல்லை.. நீதிமன்றத்தில் அதைத் தாக்கல் செய்து சம்மன் பெறவும் இல்லை. இதனிடையே நேரு உள்ளிட்டோர் முந்திக் கொண்டு நீதிமன்றத்தில் சரணடைந்ததால், திகைத்துப் போன போலீசார் வேகம் வேகமாக எப்.ஐ.ஆர். போட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
பின்னர் நீதிமன்றம் நேரு உள்ளிட்ட 6 பேருக்கு ஜாமீன் வழங்கியது.












Click it and Unblock the Notifications