இன்னும் 5 ஆண்டுகளில் சென்னையில் நிலத்தடி நீர் வறண்டு போய் விடுமாம்... அதிர்ச்சி தகவல்
டெல்லி: வறண்ட நகரமாகி வரும் சென்னையின் நிலத்தடி நீர் அபாயகரமான கட்டத்தை எட்டியுள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த நீரினால் தொற்றுநோய்கள் பரவும் ஆபத்து அதிகரித்துவருவதாக தேசிய புவியியல் ஆராய்ச்சி நிறுவன ஆய்வில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் ஐதராபாத் நகரமும், சென்னையும் வறண்ட நகரங்களாகிவருகின்றன. இன்னும் மூன்று ஆண்டுகளில் இந்த நகரங்களின் நிலத்தடி நீர் அதளபாதாளத்திற்குப் போய்விடும். நிலத்தடி நீர் வெகுவாக உறிஞ்சப்படுவதால் சாக்கடை கழிவுகள் நிலத்தடிக்குள் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சென்னையில் உள்ள நிலத்தடி நீர் குடிப்பதற்கு ஏற்றதல்ல என்றும் இதனால் நோய் பரப்பும் தன்மை அதிகரித்துள்ளது என்றும் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது ஆராய்ச்சி நிறுவனம்.
இது தொடர்பாக டெல்லியில் உள்ள தேசிய புவியியல் ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் மேலும் பல அதிர்ச்சிகரமான உண்மைகள் கண்டறியப்பட்டுள்ளன.

பொய்த்துப்போன பருவமழை
கடந்த சில ஆண்டுகளாகவே சரியான அளவில் பருவமழை பெய்வதில்லை. பருவ மழை குறைந்து போனதால் விவசாயம் பொய்த்துப்போய் உள்ளது. குளம், ஆறு, வாய்க்கால்கள் வறண்டு நிலத்தடி நீர் மட்டமும் வெகுவாக குறைந்துள்ளது.

பெருநகரங்களில் நிலத்தடி நீர்
ஹைதராபாத், சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட பெரு நகரங்களில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. வரும் 3 ஆண்டுகளில் ஆந்திர பிரதேசத்தில் நிலத்தடி நீரே இல்லாமல் வறண்டு விடும்.மழை பெய்யும்போது 16 சதவீத நீராவது நிலத்துக்குள் சென்றால் தான் நிலத்தடி நீர் மட்டம் சரியாக இருக்கும். ஆனால் மேற்சொன்ன பெருநகரங்களில் 8 சதவீத நீர் கூட நிலத்தடிக்கு செல்லவில்லை.

ரசாயனக் கலப்பு அதிகம்
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு செய்யப்பட்ட 451 நகரங்களில் தண்ணீர் மாதிரி எடுத்து சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் 247 மாதிரிகளில் உயர்ந்த அளவில் குளோரைடு, புளோரைடு, நைட்ரேட் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தவிர சென்னையில் உள்ள நிலத்தடி நீர் குடிப்பதற்கு ஏற்றதல்ல. நோய் பரப்பும் தன்மை உள்ளது என்ற தகவல் அதிர்ச்சியளிக்கிறது.

கழிவு நீர் கலக்கிறது
ஐதராபாத் நகரைப் போல வறண்ட நகரமாகிவரும் சென்னையில் நிலத்தடி நீர் வெகுவாக உறிஞ்சப்படுகிறது. இதனால் சாக்கடை கழிவுகள் நிலத்தடிக்குள் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சென்னையில் உள்ள நிலத்தடி நீர் குடிப்பதற்கு ஏற்றதல்ல. நோய் பரப்பும் தன்மை உள்ளது.

குடிநீர் பற்றாக்குறை அபாயம்
சென்னையைத் தவிர அபாயகரமான நிலையில் பெரம்பலூர் மாவட்டம் உள்ளது. அடுத்ததாக நாமக்கல், சேலம், வேலூர் ஆகிய மாவட்டங்கள் உள்ளன. இந்த மாவட்டங்களில் நிலத்தடி நீர் அதிகளவில் உறிஞ்சப்படுவதால் நிலத்தடியில் வெற்றிடம்தான் காணப்படுகிறது. மேலும் குடிநீர் பற்றாக்குறையும், மோசமான நீரால் நோய் பரவும் அபாயநிலையும் காணப்படுகிறது.

மழை நீர் சேமிக்கணும்
இந்த நிலையை தவிர்க்க மழை நீர் சேகரிப்பு அமைப்பை அனைவரும் ஏற்படுத்தி, மழை நீரை நிலத்திற்குள் திருப்பி அனுப்ப வேண்டும் என்ற கட்டாய உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. கடந்த 2001ம் ஆண்டு முதலே தமிழகத்தில் மழை நீர் சேகரிப்பு திட்டம் அமலில் உள்ளது. ஆனால் அது சரியாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதுதான் தெரியவில்லை.












Click it and Unblock the Notifications