இலங்கையில் ராட்சத சவக்குழி கண்டுபிடிப்பு: போரில் கொல்லப்பட்ட தமிழர்களின் எலும்புகளா?
கொழும்பு: இலங்கையில் ராட்சத சவக்குழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதை தோண்டியதில் இதுவரை 59 பேரின் எலும்புக்கூடுகள் கிடைத்துள்ளன.
இலங்கையில் ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த இறுதிகட்டப் போரின் போது லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். மேலும் ஆயிர்ககணக்கானோர் காணாமல் போய்விட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டது. இறுதிகட்டப்போரின் போது நடந்த மனித உரிமை மீறல் குறித்து விசாரணை நடத்த ஐ.நா. சபை உத்தரவிட்டது.
ஆனால் இலங்கை அரசோ விசாரணை நடத்தாமல் காலம் கடத்தி வருகிறது. இந்நிலையில் தலைநகர் கொழும்பில் இருந்து 142 கிமீ தொலைவில் உள்ள மாத்தளையில் இருக்கும் மருத்துவமனை ஒன்றின் அருகே ராட்சத சவக்குழி கண்டிபிடிக்கப்பட்டுள்ளது. கட்டிடப் பகுதியில் ராட்சத சவக்குழி கண்டுபிடித்திருப்பதை அறிந்து மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அந்த சவக்குழியைத் தோண்டி பார்த்த போது அதில் மனித எலும்புக் கூடுகளும், எலும்புத் துண்டுகளும் கிடந்தன. இதுவரை 59 பேரின் எலும்புக்கூடுகள் கிடைத்துள்ளன. மேலும் சில எலும்புத் துண்டுகளும் கிடைத்துள்ளன. 1,350 சதுர அடியில் அமைந்துள்ள அந்த சவக்குழியைத் தோண்டு பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதைப் பார்க்க அப்பகுதி மக்கள் அந்த இடத்தில் குவிந்துள்ளனர்.
சவக்குழியைச் சுற்றி கயிறு கட்டி 24 மணி்நேரமும் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். அந்த சவக்குழியில் உள்ள எலும்புகள் தமிழர்களுடையதாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் வேறு விதமாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
அதாவது கடந்த 1989ம் ஆண்டு போலீசார் கொன்று குவித்த ஜனதா விமுக்தி பெரமுனா இயக்கத்தின் சிங்கள போராளிகளின் எலும்புக் கூடுகளாக இருக்கலாம் என்று ஒருவர் தெரிவித்தார். இன்னொருவரோ 1940களில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலியானவர்களாக இருக்கலாம் என்றார். அதே சமயத்தில் இலங்கையில் பரவிய சின்னம்மை நோயால் இறந்தவர்களின் உடல்களாக இருக்கலாம் என்றார் மற்றொருவர். இதையடுத்து எலும்புக் கூடுகள் குறித்து விசாரணை நடத்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அரசியல் கட்சியாக உள்ள ஜனதா விமுக்தி பெரமுனா மற்றும் ஆம்னஸ்டி இன்டர்நேஷனலும் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.












Click it and Unblock the Notifications