திருச்செந்தூர் அருகே 13 வயது மாணவி பாலியல் பலாத்காரம்.. கொலை!

கிளாக்குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பேச்சியம்மாள்.இவரது கணவர் இறந்துவிட்டார். இவரது மூத்த மகள் புனிதா (13), நாசரேத்தில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.இளையமகள் மற்றொரு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்துவருகிறார்.
நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு புறப்பட்டு சென்ற மாணவி புனிதா மாலையில் வீடு திரும்பவில்லை.இதனால் அவளை அவளது தாய் பேச்சியம்மாள் மற்றும் தாத்தா முத்துப்பெருமாள் ஆகியோர் பல இடங்களில் தேடினர்.ஆனால் அவளைப்பற்றி எந்த தகவலும் தெரியவில்லை.
இதனைத்தொடர்ந்து அவர்கள்,புனிதாவுடன் தாதன்குளம் ரயில்நிலையத்தில் இருந்து பள்ளிக்கு உடன்செல்லும் அவளது தோழிகளிடம் சென்று விசாரித்தனர்.அப்போது வியாழக்கிழமை காலை புனிதா, பள்ளிக்கு வராதது தெரியவந்தது.இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள்,இது குறித்து போலீசில் புகார் செய்தனர்.
இந்நிலையில் தாதன்குளம் ரயில் நிலையத்திற்கு அருகே முள்செடிகள் அடர்ந்து வளர்ந்திருந்த பகுதியில் ஒரு சிறுமி பிணமாக கிடப்பதை இன்று காலை அவ்வழியாக சென்ற சிலர் பார்த்தனர்.
விசாரணையில் அந்த சிறுமி பள்ளிக்கு சென்றபோது மாயமான புனிதா என்பது தெரியவந்தது.புனிதாவின் வாய் மற்றும் மூக்கில் இருந்து ரத்தம் வழிந்திருந்தது.ஆடை அவிழ்க்கப்பட்டு கிடந்தது.மேலும் சுடிதார் துப்பட்டாவால் கழுத்து இறுக்கப்பட்டிருந்தது.
அச்சிறுமியை மர்ம நபர்கள் சிலர்,பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, சுடிதார் துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளது தெரியவந்தது.
இதனையடுத்து அம்மாணவியின் சடலம் கைப்பற்றப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவி புனிதா தினமும் கிளாக்குளத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தாதன்குளம் ரயில் நிலையத்திற்கு நடந்து சென்று,பின்பு அங்கிருந்து திருச்செந்தூர் பயணிகள் ரயிலில் தனது தோழிகள் சிலருடன் நாசரேத் சென்று அங்குள்ள பள்ளியில் படித்து வந்தார். பின்னர் மாலையில் இதே போல் வீடு திரும்பிவிடுவார். இதை தெரிந்து வைத்துக்கொண்ட மர்மநபர்கள் சிலர் புனிதாவை பின்தொடர்ந்து சென்று அவளை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications