கர்நாடகா: ஈஸ்வரப்பா வீட்டு ரெய்டில் சிக்கியது 37 கிலோ வெள்ளி-2 கிலோ தங்கம்!

கர்நாடக மாநில பாரதிய ஜனதா தலைவரும் துணை முதல்வருமான ஈஸ்வரப்பாவும் அவரது குடும்பத்தினரும் கடந்த 2 ஆண்டுகளில் ரூ.50 கோடிக்கும் அதிகமாக சொத்து குவித்ததாக கடந்த 13-ந் தேதி நாகலட்சுமி பாய் என்பவர் ஆளுநர் பரத்வாஜிடம் புகார் கொடுத்தார். இப்புகார் கொடுக்கப்பட்ட அதே நாளில் வழக்கறிஞர் வினோத்குமார் என்பவர் ஷிமோகா லோக் அயுக்தா நீதிமன்றத்தில் இதே போல் புகார் அளித்தார்.
இப்புகாரின் அடிப்படையில் ஈஸ்வரப்பா மற்றும் அவரது மகன் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. பின்னர் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய லோக் அயுக்தா போலீசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து இன்று காலை ஈஸ்வரப்பாவின் பெங்களூர் மல்லேஸ்வரம் வீடு, ஷிமோ வீடு, அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான கல்வி அறக்கட்டளை, உதவியாளர் சோமு சேகர் வீடு உட்பட 7 இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் மட்டுமின்றி 37 கிலோ வெள்ளி, 2 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டிருக்கிறது.
முன்னதாக தமது வீட்டில் நடத்தப்படும் சோதனை குறித்து கருத்து தெரிவித்த ஈஸ்வரப்பா, உண்மை வெளிவரட்டும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது தங்கமும் வெள்ளியும் கிலோ கணக்கில் கைப்பற்றப்பட்டிருப்பதால் அவர், துணை முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது,.












Click it and Unblock the Notifications