நைட்ல ஏன் பொண்ணுங்க தனியா போறாங்க? ஆந்திரா காங். தலைவர் கேள்வியால் அதிர்ச்சி

ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் போட்சா சத்யநாராயணா நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர்,"இந்தியாவுக்கு நள்ளிரவில் சுதந்திரம் கிடைத்தது என்பதற்காக இருட்டிய பின்னர் பெண்கள் வெளியே சுற்றக்கூடாது என்றார். குறைந்த பயணிகள் உள்ள பஸ்களில் பெண்கள் ஏறக்கூடாது.
டெல்லியில் ஓடும் பஸ்சில் மாணவி கற்பழிக்கப்பட்டது சிறிய சம்பவம். சம்பவம் நடந்த பஸ்சில் ஏறுவதற்கு முன்னதாக, அந்த மாணவி 2 முறை யோசனை செய்திருக்க வேண்டும். நடந்த சம்பவம் கண்டனத்துக்குரியது தான் என்றாலும், நிலைமையை புரிந்துக் கொண்டு அந்த மாணவி செயல்பட்டிருக்க வேண்டும்.
போராட்டக்காரர்களுடன் எங்கள் கட்சித்தலைவி சோனியா காந்தி பேச்சு வார்த்தை நடத்திய பிறகு, டெல்லியிலும் ஆந்திர மாநிலத்திலும் இன்னும் போராட்டங்களை நடத்தி வருபவர்கள், சட்டத்தை தங்களின் கையில் எடுத்துக் கொள்ள முயற்சிக்கின்றார்கள் என அவர் கூறினார்.
இந்த பேட்டியை, உடனடியாக ஆந்திராவில் உள்ள அனைத்து டி.வி. சேனல்களும் ஒளிபரப்பின. அவரது கருத்துக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது. உடனே 2வது முறையாக பத்திரிகையாளர் சந்திப்புக்கு போட்சா சத்யநாராயணா ஏற்பாடு செய்தார்.
இது சிறிய சம்பவம் அல்ல
இந்த சந்திப்பின் போது,"ஒரு பொறுப்புள்ள தந்தையின் தகுதியில் இருந்து எனது கருத்தை முந்தைய பேட்டியில் தெரிவித்தேன். அந்த மாணவிக்கு நேர்ந்தது சிறிய சம்பவம் அல்ல. சிறிய சம்பவமாக இதை பார்க்க கூடாது. சிறிய சம்பவம் என்று நான் தெரிவித்த கருத்துக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
நள்ளிரவு நேரத்திலும் பெண்கள் பயமின்றி வெளியே செல்லதற்கான சூழலை அனைத்து அரசுகளும் உருவாக்க முயற்சிக்க வேண்டும்."என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications