4வது முறையாக முதல்வராக பதவியேற்ற நரேந்திர மோடி: ஜெயலலிதா- அத்வானி பங்கேற்பு

அண்மையில் நடந்து முடிந்த குஜராத் சட்டசபை தேர்தலில் நரேந்திர மோடி அமோக வெற்றி பெற்று தொடர்ந்து 4வது முறையாக முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அவர் இன்று காலை 11 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள சர்தார் பட்டேல் ஸ்டேடியத்தில் நடந்த பதவியேற்பு விழாவில் கடவுளின் பெயரால் 4வது முறையாக முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு குஜராத் ஆளுநர் கமலா பெனிவால் பதவிப் பிரமானமும், ரகசிய காப்பு பிரமானமும் செய்து வைத்தார்.
இந்த விழாவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் மகாராஷ்டிரா நவநிர்மன் சேனா தலைவர் ராஜ் தாக்கரே ஆகியோர் கலந்து கொண்டனர். ராஜ் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டார். மேலும் சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரேவும் விழாவில் கலந்து கொண்டார். முன்னதாக உத்தவை மோடி அழைக்கவில்லை என்று கூறப்பட்டது. ஆனால் அவர் விழாவில் கலந்து கொண்டார்.
இந்த விழாவில் பாஜக தலைவர் நிதின் கட்காரி, மூத்த தலைவர்களான அத்வானி, சுஷ்மா சுவராஜ், ராஜ்நாத் சிங், வெங்கையா நாயுடு, வசுந்தரா ராஜே சிந்தியா, நவ்ஜோத் சிங் சித்து, அருண் ஷோரி, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிர நவநிர்மன் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, அகாலி தள தலைவரும் பஞ்சாப் முதல்வருமான பிரகாஷ் சிங் பாதல் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
ஆர்எஸ்எஸ் தலைகள் வரவில்லை...
ஆனால், இந்த நிகழ்ச்சியில் மோடி முறைத்துக் கொண்ட ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் கலந்து கொள்ளவில்லை. பதவியேற்பு விழாவில் முன் வரிசையில் அத்வானி, சுஷ்மாவுக்கு அருகே ஜெயலலிதாவுக்கு இருக்கை போடப்பட்டிருந்தது.
அதே நேரத்தில் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கல் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அதே போல சகாரா குழுமத் தலைவர் சுப்ரதோ ராய், கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டார், மத்தியப் பிரதேச பாஜக முதல்வர் செளகான், நடிகர் விவேக் ஒபராய், அவரது தந்தை ஆகியோரும் பங்கேற்றனர்.
நிதிஷ் குமார் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை:
பிகார் மாநில முதல்வரும் மோடியின் தீவிர எதிர்ப்பாளருமான நிதிஷ் குமார் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.
மோடியுடன் 16 அமைச்சர்கள் பதவியேற்பு:
நரேந்திர மோடியுடன் 7 கேபினட் அமைச்சர்களும், 9 இணை அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
நிதின் பட்டேல், ஆனந்தி பட்டேல், ராமன் வோரா, புபேந்திரசிங் சுடாசாமா, சௌரப் பட்டேல், கண்பட் வசவா, பாப்பாய் பொகியாரியா ஆகியோர் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றனர். மேலும் புருஷோத்தம் சொலான்கி, பர்பட் பட்டேல், வாசுபென் திரிவேதி, பிரதீப்சிங் ஜடேஜா, லீலாதர் வகேலா, ரஜினிகாந்த் பட்டேல், கோவிந்த் பட்டேல், நானுபாய் வனானி மற்றும் ஜெயந்தி கவாதியா ஆகியோர் இணை அமைச்சர்களாக் பதவியேற்றுக் கொண்டனர்.












Click it and Unblock the Notifications