இந்திய மக்களை கொதிப்படைய வைத்த டெல்லி கற்பழிப்பு சம்பவம்
டெல்லி: டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ படிப்பு மாணவி கற்பழிக்கப்பட்டது இந்திய மக்களை கொதிப்படைய வைத்தது.
டிசம்பர் மாதம் 16ம் தேதி இரவு டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ படிப்பு மாணவி 6 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டார். இதை தடுக்க முயன்ற அவரது ஆண் நண்பர் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டார். அந்த பெண்ணையும் அந்த கும்பல் இரும்புக் கம்பியால் தாக்கியதில் அவரின் குடல் வெளியே வந்தது.
இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அப்பெண் டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு 6 முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவரது குடல் பலத்த சேதம் அடைந்ததால் அவரால் இனி ஒரு வேளை கூட உணவை வாயால் உண்ண முடியாது. மாறாக நரம்புகள் மூலம் தான் ஏற்ற வேண்டும். அவரது உடல் நிலை தொடர்ந்து மோசமாகவே உள்ளது. இந்நிலையில் இந்த சம்பவத்தைக் கண்டித்து டெல்லியில் கடந்த 18ம் தேதி முதல் போராட்டம் நடந்தது. போராட்டம் தீவிரமடைந்ததையடு்த்து போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகள் வீசி கூட்டத்தைக் கலைத்தனர்.
இருப்பினும் போராட்டக்காரர்கள் கலைந்து போகாததால் போராட்டம் நடந்த இந்தியா கேட் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த போராட்டம் டிசம்பர் 24ம் தேதி வரை தொடர்ந்து நடந்தது. இந்த கற்பழிப்பு சம்பவத்தை அடுத்து டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. அந்த பெண்ணின் வாழ்க்கையை கெடுத்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் அந்த 6 பேருக்கும் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர்.












Click it and Unblock the Notifications