லக்னோவில் 90% பெண்கள் ஈவ் டீசிங்கால் பாதிப்பு: கடுமையாகும் தண்டனை
லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் அரசு பேருந்தில் பயணிக்கும் 90 சதவிகித பெண்கள் ஈவ் டீசிங் பாதிப்பிற்கு ஆளாவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. அம்மாநிலத்தில் மட்டும் தினசரி 5 ஈவ் டீசிங் வழக்குகள் பதிவு செய்யப்படுவதாக தேசிய குற்றப்பிரிவு ஆணையத்தின் புள்ளிவிபரம் அதிர்ச்சியளிக்கிறது.
நாடுமுழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. பாலியல் பலாத்கார சம்பவங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டங்களும் நடைபெறுகின்றன. பாலியல் வன்முறை மட்டுமல்லாது ஈவ் டீசிங் கொடுமைகளும் அதிகரித்து வருகின்றன.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் அரசுப் பேருந்தில் பயணம் செய்யும் 90 சதவிகித பெண்கள் ஈவ் டீசிங்கில் பாதிக்கப்படுவதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து ஈவ்-டீசிங் உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தர பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.

உ.பியில் 40 பேர் பலாத்காரம்
உத்தர பிரதேசத்தில் கடந்த 10 மாதங்களில் 40க்கும் மேற்பட்ட சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்காக அவசர தொலைப்பேசி எண்ணான 1090 திட்டத்தை அகிலேஷ் கடந்த மாதம் துவக்கி வைத்தார். இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பின் லக்னோவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருமளவில் குறைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

61000 அழைப்புகளுக்கு பதில்
இந்த அவசர தொலைப்பேசி எண் திட்டத்தின் கீழ் இது வரை 61,000 அழைப்புகள் பெறப்பட்டு, பெண்களுக்கு உதவி செய்யப்பட்டுள்ளது. இதில் சுமார் 15,000 தொலைப்பேசி அழைப்புகள் அறிமுகமில்லாத நபரிடம் இருந்து வந்த ஆபாச அழைப்புகள் ஆகும்.

ஈவ் டீசிங் டிரைவிங் லைசென்ஸ் கட்
இதனிடையே மத்திய பிரதேச மாநிலத்தில் ஈவ் டீசிங் குற்றத்தில் ஈடுபடுபவர்கள் டிரைவிங் லைசென்ஸ் மற்றும் பாஸ்போர்ட் பெற முடியாது என்று அம்மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் எச்சரித்துள்ளார்.
ஈவ் டீசிங் செய்பவர்களுக்கு டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட் மற்றும் நன்னடத்தை சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட மாட்டாது. மீண்டும் அவர்கள் அதுபோன்ற குற்றங்களை செய்வது தெரிய வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவில் 3 ஆண்டு சிறை
ஆந்திராவில், அதிகரித்து வரும் ஈவ்-டீசிங் குற்றங்களை கட்டுப்படுத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை வழங்கும் வகையில், புதிய சட்ட மசோதாவை அமல்படுத்தப்படுள்ளது.
விரும்பத்தகாத எஸ்.எம்.எஸ்., தொந்தரவுகள், அசிங்கமான செய்கைகள் போன்றவற்றைச் செய்தால், மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். மேலும், பெண்கள் மீது ஆசிட் வீசினால், ஏழு ஆண்டுகள் சிறையும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஒரு லட்சம் முதல், இரண்டு லட்ச ரூபாய் வரை இழப்பீடு கிடைக்கும்.

தமிழ்நாட்டில் என்ன தண்டனை
தமிழ்நாட்டிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. ஈவ் டீசிங், பாலியல் பலாத்கார குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனைகளை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.












Click it and Unblock the Notifications