டெல்லியில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்: ஓடும் காரில் தலித் சிறுமி பலாத்காரம்
டெல்லி: டெல்லியில் ஓடும் காரில் தலித் சிறுமியை 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
ஓடும் பேருந்தில் மருத்துவமாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை நாடு முழுவதும் நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்தவண்ணம் உள்ளன. அந்த வகையில் டெல்லியில் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பைசாபாத்தைச் சேர்ந்த தலித் சிறுமியை அவரது வீட்டில் இருந்து 4 பேர் கடந்த 15-ம் தேதி டெல்லிக்கு கடத்தி வந்து காரில் வைத்து பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் அவரை மீண்டும் பைசாபாத் கொண்டு சென்று பஸ் நிறுத்தத்தில் விட்டுவிட்டுச் சென்றுள்ளனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோல் ஜம்முவின் புறநகரான அம்குரோடாவில் கடந்த சனிக்கிழமை இரவு 18 வயது பெண்ணை டிரைவர் மற்றும் அவரது நண்பர் இருவரும் வனப்பகுதிக்கு கடத்திச் சென்று கற்பழித்துள்ளனர். குற்றவாளிகள் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
இதுபோன்று நாட்டிற்கு அவமானத்தை ஏற்படுத்தும் பாலியல் பலாத்காரப் புகார்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், போலீஸ் அதிகாரிகள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.