சாதி அமைப்புகள் கூட்டம்: மதுரை கலெக்டரின் நோட்டீஸை வாங்க மறுத்த ராமதாஸ்
திண்டிவனம்: மதுரை மாவட்ட கலெக்டர் முன் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்ற உத்தரவுடன் கூடிய நோட்டீஸை போலீசார் வழங்கச் சென்றபோது அதை வாங்க பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மறுத்துவிட்டார்.
மதுரையில் தலித்கள் அல்லாத அனைத்து சமுதாய பாதுகாப்புப் பேரவை ஆலோசனைக் கூட்டத்தை ராமதாஸ் நடத்தினார். 51 சாதி சங்கங்களை திரட்டி அவர் நடத்திய இந்தக் கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவும், நாடக காதல் திருமணங்களால் பாதிக்கப்படும் பெற்றோர்களைப் பாதுகாக்கவும் அனைத்து சமுதாயப் பாதுகாப்பு பேரவை என்ற புதிய அமைப்பு தொடங்கப்படுவதாகக் கூறினார்.
ராமதாசின் இந்த பேட்டிக்காக ஏன் உங்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று கேட்டும் உங்கள் பேச்சு தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க கோரியும் ராமதாசுக்கு மதுரை மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஸ்ரா நோட்டீஸ் அனுப்பியிருந்தார். மேலும் அந்த நோட்டீசில் குற்றவியல் சட்டம் 144-வது பிரிவின் கீழ் இந்த பேச்சுக்காக மதுரை மாவட்டத்துக்குள் நீங்கள் நுழைய ஏன் தடை விதிக்கக் கூடாது என்றும் கேட்கப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக ராமதாஸ் புதன்கிழமை தன்னை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க வேண்டுமென்றும் கலெக்டர் அன்சுல் மிஸ்ரா உத்தரவிட்டிருந்தார்.
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் சம்பத் மூலம் இந்த நோட்டீஸ் திண்டிவனம் வட்டாச்சியர் கோபால்சாமிக்கு அனுப்பப்பட்டது. இதை வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் திண்டிவனத்தில் உள்ள ராமதாசின் வீட்டிற்குக் கொண்டு சென்றனர்.
ஆனால், அங்கு அவர் இல்லாத காரணத்தினால் அந்த நோட்டீஸ் வானூர் வட்டாட்சியர் குமாரபாலனுக்கு அனுப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து வட்டாட்சியர் குமாரபாலன் தைலாபுரத்தில் உள்ள ராமதாஸின் வீட்டிற்கு நேரில் சென்ற போது அங்கும் அவர் இல்லாததால் அவரது வீட்டின் கதவில் நோட்டீஸ் கடந்த சனிக்கிழமை ஒட்டப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் அந்த நோட்டீஸை கிளியனூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் எடுத்துக் கொண்டு தைலாபுரத்தில் உள்ள ராமதாஸின் வீட்டுக்கு திங்கள்கிழமை இரவு 9 மணிக்கு சென்றார்.
அப்போது ராமதாஸ் வீட்டில் தான் இருந்தார். ஆனால், அந்த நோட்டீஸை ராமதாஸ் வாங்க மறுத்துவிட்டார்.
நான் வீட்டில் தான் இல்லாதது தெரிந்தும் கூட, எனது பெயரை களங்கபடுத்தும் வகையில் வீட்டின் கதவில் நோட்டீஸை ஒட்டிச் சென்றுள்ளனர். தற்போது மீண்டும் அதே நோட்டீஸ் வழங்குவதை நான் வாங்க விரும்பவில்லை என்று கூறிவிட்டார் ராமதாஸ்.