தவறுதான்... பெண்கள் குறித்து அவதூறாகப் பேசிய பிரணாப் மகன் மன்னிப்பு கேட்டார்

டெல்லி இந்தியா கேட் பகுதியில் பெண்கள் உள்ளிட்டோர் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். குறிப்பாக மாணவிகள் பெருமளவில் போராட்ங்களை நடத்தி வருகின்றனர். இதை கேலி செய்யும் வகையில் கருத்து தெரிவித்திருந்தார் அபிஜித் முகர்ஜி.
அவர் கூறுகையில், மேக்கப் போட்டுக் கொண்டு, பேஷன் போல போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். மெழுகுவர்த்தி ஏந்திப் போராடுகிறார்கள், டிஸ்கோ கிளப்புகளுக்குப் போகிறார்கள். இதெல்லாம் கல்லூரியில் எல்லோரும் செய்ததுதான். பலர் நல்ல மேக்கப்புடன் வருகிறார்கள். கூடவே குழந்தைகளையும் கூட்டிக் கொண்டு வருகிறார்கள். அழகாகவும் இருக்கிறார்கள். ஆனால் அவர்களைப் பார்த்தால் மாணவிகளைப் போலவே இல்லை என்று கூறியிருந்தார் அபிஜித்.
சகோதரி ஷர்மிஸ்தா கடும் கண்டனம்
இதற்கு அபிஜித்தின் சகோதரி ஷர்மிஸ்தா முதல் ஆளாக கடும் கண்டனம் தெரிவித்தார். எனது சகோதரரின் பேச்சுக்காக அத்தனை பேரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அவரது பேச்சு மிகவும் அவதூறானது, தவறானது. முதலில் அவர் பெண்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர் காட்டமாக கூறியிருந்தார்.
மேலும் பல்வேறு பெண்கள் அமைப்புகளும் அபிஜித்துக்குக் கண்டனம் தெரிவித்திருந்தன. இதையடுத்து தனது பேச்சுக்காக மன்னிப்பு கேட்டுள்ளார் அபிஜித். இதுகுறித்து அவர் கூறுகையில்,
போராட்டக்காரர்கள் குறித்து நான் கூறிய கருத்து யாரையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். போராட்டக்காரர்களை புண்படுத்தும் நோக்கில் நான் கருத்து கூறவில்லை. டெல்லியில் மாணவி கற்பழிப்பு விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளது.
நான் வெளியிட்ட கருத்துக்களை திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். நான் சொன்ன கருத்தால் என் தந்தை மற்றும் குடும்பத்தினர் அனைவரும் வருத்தம் அடைந்துள்ளனர்.
என்னால் ஜனாதிபதி பொறுப்பில் உள்ள என் தந்தைக்கு நெருக்கடி ஏற்பட்டு விட்டது. நான் செய்த தவறுக்கு நான் பொறுப்பு ஏற்று மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். என் பேச்சால் சர்ச்சை ஏற்பட்டதற்காக நான் என் தந்தையிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நான் சொன்ன கருத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை.
நான் சொன்ன கருத்துகளுக்கு முழுக்க முழுக்க நானே பொறுப்பு. ஒரு வேளை காங்கிரஸ் மேலிடம் என்னை பதவியில் இருந்து விலக உத்தரவிட்டால் உடனே நான் பதவி விலகுவேன். நான் சட்டத்தை மதிக்கும் குடிமகன். கட்சிக்கு விசுவாசமாக இருப்பவன். எனவே கட்சி முடிவுக்கு கட்டுப்படுவேன் என்றார் அபிஜித்.
சர்ச்சைகளைத் தீர்த்து வைப்பதில் கில்லாடி பிரணாப் முகர்ஜி. ஆனால் அவரது மகனோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி விட்டார்.
சென்னை வருகிறார் பிரணாப்
இதற்கிடையே, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று சென்னை வருகிறார். சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் 8-வது பட்டமளிப்பு விழா அந்தப் பல்கலைக்கழக வளாகத்தில் நண்பகல் 12 மணிக்கு நடைபெறுகிறது.
இதற்காக சென்னை வருகிறார் பிரணாப் முகர்ஜி. பட்டமளிப்பு விழாவுக்குப் பின்னர் பிற்பகல் 1.30 மணியளவில் அவர் டெல்லி கிளம்பிச் செல்கிறார்.












Click it and Unblock the Notifications