காலை உடைங்கடா... நிருபர்களை மிரட்டி பின் கை கூப்பி மன்னிப்பு கேட்ட பாமக பிரமுகர்!

சமீப காலமாக மீண்டும் தனது பழைய பாதையில், ஜாதித் தலைவராக மாறி நடைபோட்டு வரும் டாக்டர் ராமதாஸ் தலைமையில் சேலம் ஹோட்டல் ஒன்றில் அனைத்து சமுதாய பாதுகாப்புப் பேரவையின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.
முக்கிய முடிவுகள் எடுப்பார்களே என்பதற்காக செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் என பத்திரிக்கையாளர்கள் திரளாக செய்தி சேகரிக்க வந்திருந்தனர். ஆனால், யாரையும் உள்ளே விடவில்லை பாமகவினர். வாசலிலேயே தடுத்து விட்டனர். கூட்டம் முடியும் வரை பத்திரிக்கையாளர்களுக்கு அனுமதி கிடையாது, கூட்டம் முடிந்ததும் 'மருத்துவர் ஐயாவே' அழைத்துப் பேசுவார் என்று கூறினர்.
இந்த நிலையில் ஒரு புகைப்படக்காரர் ஒரே ஒரு படம் மட்டும் எடுத்து விட்டு வந்து விடுகிறேன் என்று கூறி உள்ளே செல்ல முயன்றார். அப்போது ஒரு பாமக பிரமுகர் படு கோபமாக அவரிடம் வந்து, ''யோவ், படமெல்லாம் எடுக்க கூடாது'' என்று கூறி சட்டையைப் பிடித்து இழுத்துத் தள்ளினார். இதனால் கோபமடைந்த அந்த புகைப்படக்காரர் ''மரியாதையாகப் பேசுங்கள்'' என்று கூறினார். இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது அங்கு வந்த சேலம் மாநகர பாமக செயலாளர் கதிர் ராசரத்தினம் அந்த புகைப்படக்காரரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு அமைதிப்படுத்தினார். இதையடுத்து அங்கிருந்து நகர்ந்த புகைப்படக்காரர், தன்னுடன் வந்திருந்த தனது பத்திரிக்கை செய்தியாளரிடம் இதைக் கூறினார். இதைப் பார்த்து கோபமடைந்த அந்த பாமக பிரமுகர் மீண்டும் வேகமாக வந்தார். அங்கிருந்த பாமகவினரிடம், ''டேய் இவன் அடங்கமாட்டான் போல ரூமுக்கு தூக்கிட்டு போங்கடா... இவனுங்க கைய்ய கால உடைச்சா தான் சரிபட்டு வருவானுங்க'' என்றார்.
இதைப் பார்த்து பாமகவினர் திரண்டு வந்தனர். பதிலுக்கு பத்திரிக்கையாளர்களும் திரண்டனர். இதனால் அந்த இடத்தில் பெரிய அசம்பாவிதம் ஏற்படும் சூழல் உருவானது. பத்திரிக்கையாளர்கள் ஒட்டுமொத்தமாக திரண்டு சம்பந்தப்பட்ட பாமக பிரமுகருக்கு எதிராக கிளம்பியதால் அந்த பாமக பிரமுகரை அங்கிருந்து அவசரம் அவசரமாக அனுப்பி வைத்து விட்டனர் கட்சி நிர்வாகிகள்.
பிரச்சினை பெரிதாவதை உணர்ந்த அகில இந்திய தேசிய பார்வர்டு ப்ளாக் அமைப்பின் நிறுவன தலைவர் பி.டி.அரசகுமார் நேரில் வந்து பத்திரிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டார். ஆனால் பத்திரிக்கையாளர்கள் விடவில்லை. சம்பந்தப்பட்ட நபர் வந்து எங்களிடம் மன்னிப்பு கேட்டால்தான் நாங்கள் செய்தியாளர் சந்திப்புக்கு வருவோம், செய்தி சேகரிப்போம் என்று கூறி விட்டனர்.
இதையடுத்து சேலத்தைச் சேர்ந்த முன்னாள் பாமக எம்.எல்.ஏ. தமிழரசு சம்பந்தப்பட்ட பிரமுகரை தேடிக் கண்டுபிடித்துக் கூட்டி வந்து பத்திரிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்குமாறு கூறினாரும். அவரும் இறுகிப் போன முகத்துடன் கை கூப்பி ''மன்னிப்பு கேட்டு இனிமேல் இதுபோல நடக்க மாட்டேன். மன்னிச்சிருங்க'' என்று கூறினார்.
சம்பந்தப்பட்ட நபரின் பெயர் பார்த்திபனாம். இந்த விவகாரம் பின்னர் டாக்டர் ராமதாஸ் காதுகளுக்கும் போனது. செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவரும் இதற்காக வருத்தம் தெரிவித்துக் கொண்டார்.
படம் - நக்கீரன்












Click it and Unblock the Notifications