மகா கும்பமேளா: சங்கராச்சாரியர்கள்- 'அகாடா' சாதுக்கள் இடையே மோதல் அபாயம்!
அலகாபாத்: உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் வரும் ஜனவரி 14-ந் தேதி முதல் தொடங்க இருக்கும் மகா கும்பமேளாவில் இந்து சாதுக்களுக்கும் சங்கராச்சாரிகளுக்கும் இடையே மிகப் பெரும் மோதலை உருவாக்கக் கூடிய அபாயம் இருப்பதை வெளிப்படுத்தி இருக்கிறது.
மகாகும்பமேளா என்பது 12 ஆண்டுகளுக்கு ஓராண்டு வரக் கூடியது. அரைக் கும்பமேளா என்பது 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரக் கூடியது. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளாவும் கடைபிடிக்கப்படுகிறது. தற்போது அலகாபாத்தில் மகா கும்பமேளா நடைபெற இருக்கிறது.
மகா கும்பமேளா காலத்தில் புனித நாட்களில் அகாடாக்கள் எனப்படும் சாதுக்களின் பிரிவுகள் வரிசைப்படியாக சென்று புனித நீராடுவர். இதே கும்பமேளா காலத்தில் ஆதி சங்கரர் நிறுவிய அதிகாரப்பூர்வமான 4 சங்கராச்சாரிகளும் ஒன்று கூடி ஆலோசனை நடத்துவர்.
அகாடாக்கள் என்பது இந்து மதத்தைக் காப்பாற்றுவதற்காக ஆதிசங்கரரால் அமைக்கப்பட்ட 'போராளி அமைப்பு'. மொத்தம் 12 அகாடாக்கள் இருக்கின்றன. இதில் பல்லாயிரக்கணக்கான இதில் நாகா சாதுக்கள் எனப்படுகிற நிர்வாண சாதுக்கள் மிகவும் வன்மம் கொண்டவர்கள். கும்பமேளா காலங்களில் இந்த சாதுக்களின் அகாடாக்களிடையே யார் முதலில் புனித நீராடுவது என்பதில் பெரும் மோதலே நடைபெறும். அப்படி புனித நீராடும் சாது பிரிவினருக்கு (அகாடாவினருக்கு)த்தான் இறைவனின் முழு அருளும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஹரித்வாரில் பல ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த இத்தகைய மோதல்களில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
சங்கராச்சாரிகள் என்போர் இந்து மதத்தைப் பரப்புவதற்காக ஆதிசங்கரரால் அமைக்கப்பட்ட 4 மடங்களின் பீடாதிபதிகள்.
தற்போது அகாடாக்களுக்கும் சங்கராச்சாரிகளுக்கும் இடையே பிளவு ஏற்படும் வகையில் அலகாபாத் மகா கும்பமேளாவில் சம்பவங்கள் நடந்து வருகின்றன.
கும்பமேளா நடைபெறும் பகுதியில் 4 அதிகாரப்பூர்வ சங்கரமடங்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்படுவதில் பிரச்சனை உருவாகி இருக்கிறது. இதுவரை இதுபோன்ற ஒரு நிலைமை உருவானது இல்லை. இதற்கு அகாடாக்களின் பிரதிநிதிகளே காரணம் என சங்கராச்சாரிகள் கருதுகின்றனர். ஆனால் அகாடா சாதுக்களின் பிரதிநிதிகளோ மவுனம் சாதித்து வருகின்றனர்.
இரு தரப்பினரிடையே நீடிக்கும் மெளனமானது அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் கும்பமேளா காலத்தில் நிகழ்ந்துவிடுமோ என்ற அச்சத்தை உருவாக்கி இருக்கிறது.












Click it and Unblock the Notifications