அரசிதழில் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு- சுப்ரீம் கோர்ட்டில் தமிழகம் முறையிட முடிவு!
சென்னை: காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடுவதற்காக உச்ச நீதிமன்றத்தில் முறையிட தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது.
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தி வருகிறார். காவிரி கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில், இந்தத் தீர்ப்பை டிசம்பர் மாத இறுதிக்குள் அரசிதழில் வெளியிட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்தத் தகவலை உச்ச நீதிமன்றமும் தனது உத்தரவில் பதிவு செய்துகொண்டது.
ஆனால், இதுவரை அரசிதழில் இந்தத் தீர்ப்பு வெளியிடப்படவில்லை. இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கை வலியுறுத்தி கடிதங்களையும் முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ளார். மத்திய அரசிடமிருந்து இது தொடர்பாக எந்தப் பதிலும் வரவில்லை.
இந்நிலையில் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிடுவது து தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர்கள், அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் காவிரியில் தமிழகத்துக்குரிய நீரைத் திறந்துவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் ஜனவரி 4-ந் தேதி விசாரணைக்கு வருகிறது. அப்போது, நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடும் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் கவனத்தை ஈர்ப்பது என முதல்வர் தலைமையிலான கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
மேலும் தமிழகத்துக்கு தொடர்ந்து இழைக்கப்படும் அநீதி தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் முன்வைக்க வேண்டிய வாதங்கள் குறித்தும் அதிகாரிகளுக்கு ஜெயலலிதா ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications