புத்தாண்டு புதிய வாழ்வையும், வளத்தையும் அளிக்கட்டும் - ஜெ. வாழ்த்து
சென்னை: புலரும் புத்தாண்டு, புதிய வாழ்வையும் வளத்தையும் வெற்றிகளையும் வழங்கும் இனிய புத்தாண்டாக மலரட்டும் என்று வாழ்த்தி, என் அன்பிற்குரிய தமிழக மக்கள் அனைவருக்கும் என் உளம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று முதல்வர் ஜெயலலிதா வாழ்த்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி:
புத்தம் புது நம்பிக்கைகளுடன் மலருகின்ற இந்தப் புத்தாண்டில், தமிழக மக்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தை முதன்மை மாநிலமாக உருவாக்கிட வேண்டும் என்பதும், மக்களின் வாழ்க்கை தரம் உயர்வடைய வேண்டும் என்பதும் உங்கள் அன்பு சகோதரியின் தலைமையிலான அரசின் குறிக்கோளாகும். அதனை செயல்படுத்தும் வகையில், தமிழக அரசு பல்வேறு ஆக்கப்பூர்வமான திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருவதை அனைவரும் நன்கு அறிவர்.
அனைத்துத் தரப்பு மக்களையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியினால் மட்டுமே ஒரு நாடு ஒட்டுமொத்த வளர்ச்சியைப் பெற முடியும்.
எல்லாரும், எல்லாமும் பெற வேண்டும், இங்கே இல்லாமை இல்லாத நிலை வேண்டும் என்ற எனது அரசின் குறிக்கோளை அடையும் வகையில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட இந்தப் புத்தாண்டில் உறுதியேற்போம்.
புலரும் புத்தாண்டு, புதிய வாழ்வையும் வளத்தையும் வெற்றிகளையும் வழங்கும் இனிய புத்தாண்டாக மலரட்டும் என்று வாழ்த்தி, என் அன்பிற்குரிய தமிழக மக்கள் அனைவருக்கும் என் உளம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
வைகோ வாழ்த்து
இதேபோல மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், கால வெள்ளத்தில் சோதனை சூழல்கள் தமிழகத்தை முற்றுகையிட்டு 2012 விடைபெற்று 2013ம் ஆண்டில் பிரவேசிக்கிறோம்.
பருவமழை பொய்த்ததாலும், தமிழகத்தில் நதிநீர் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு அண்டை மாநிலங்கள் கேடு செய்ததாலும், மத்திய அரசின் துரோகம் வளர்ந்ததாலும், பெரும் நலிவுக்கும், துன்பத்திற்கும் தமிழக மக்கள் ஆளாகினர்.
இருளுக்குப் பின்னர் வெளிச்சம் வந்துதானே தீரும் என்ற நியதிக்கு ஏற்ப வளமும் செழிப்பும் தமிழகத்திற்கு 2013ம் ஆண்டு வழங்கும் எனும் நம்பிக்கைக் கொள்வோம் என்று வாழ்த்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications