புத்தாண்டை கொண்டாட பெங்களூர் சென்ற கோவை சாப்ட்வேர் என்ஜினியர் நண்பர்களால் குத்திக் கொலை
பெங்களூர்: கோவையில் வசித்து வந்த கம்ப்யூட்டர் என்ஜினியர் பெங்களூருக்கு புத்தாண்டை கொண்டாட வந்த இடத்தில் நண்பர்களால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
திருப்பூரைச் சேர்ந்தவர் கார்த்திக் விஷ்ணு(24). கோவை அருகே உள்ள பல்லடத்தில் வசித்து வந்தார். அவர் புத்தாண்டைக் கொண்டாட தனது நண்பர்களுடன் பெங்களூருக்கு வந்தார். அங்கு ஜெயா நகரில் உள்ள சவுத் என்ட் சர்க்கிள் அருகே நேற்று அதிகாலை 1 மணிக்கு மேல் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். லா மார்வெல்லா ஹோட்டலுக்கு அருகில் கிடந்த அவரைப் பார்த்த ஹோட்டல் பாதுகவாலர் ஒருவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
வயிறு, முகம் மற்றும் தொடைகளில் காயம் இருந்த கார்த்திக் புனித ஜான்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலையிலேயே இறந்தார். முதலில் இது விபத்து என்று நினைத்த போலீசாருக்கு ஹோட்டலின் சிசிடிவி கேமராவைப் பார்த்தபோது தான் அது கொலை என்று தெரிய வந்தது.
கார்த்திக்கும் அவரது நண்பர்களும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்றுவிட்டு இரவு 1 மணிக்கு மேல் ஹோட்டலை விட்டு வெளியே வந்துள்ளனர். ஆட்டோவுக்காக அவர்கள் காத்திருந்தபோது நண்பர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கார்த்திக்கை அவரது நண்பர்கள் 5 பேர் சேர்ந்து கத்தியால் குத்திவிட்டு ஆட்டோவில் தப்பியோடிவிட்டது கேமராவில் பதிவாகி இருந்தது.
இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் கார்த்திக்கின் நண்பர்கள் 5 பேரைக் கைது செய்தனர். இந்த கொலை குடிபோதையில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கார்த்திக்கின் நண்பர்களில் சிலர் தான் பெங்களூரூவில் வசிக்கின்றனர். மற்றவர்கள் புத்தாண்டைக் கொண்டாட தமிழகத்தில் இருந்து வந்தவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.
இது குறித்து போலீசார் மேலும் கூறுகையில், கார்த்திக் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தான் பெங்களூர் வந்துள்ளார். பெங்களூரில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் 6 மாதங்கள் பணிபுரிந்த கார்த்திக் அங்கிருந்து சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளார். அதன் பிறகு கோவை அருகே உள்ள பல்லடத்திற்கு சென்று வீட்டில் இருந்தே அதே நிறுவனத்திற்காக பணிபுரிந்து வந்துள்ளார் என்றனர்.












Click it and Unblock the Notifications