ஒரே நாளில் 12 லட்சம் பீர் பாட்டில்களை உடைத்த குடிமக்கள்... ரூ. 95 கோடிக்கு புத்தாண்டு மது விற்பனை
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் என்றைக்குப் பெருகிப் போனதோ அன்று முதலே திருவிழாக் கோலம்தான் கடைகள் தோறும். திருவிழாக்கள், விசேஷங்கள், விடுமுறை நாட்கள், புத்தாண்டு உள்ளிட்ட நாட்களின்போது மது விற்பனை அமோகமாக இருக்கிறது.
இந்த புத்தாண்டு தினத்திற்கும் கூட்டம் கட்டி ஏறியது. மொத்தம் உள்ள 6800 மதுக் கடைகளிலும் குடிகாரர்கள் கூட்டம் மொய்த்தெடுத்து விட்டது. இதனால் கலலா நிரம்பி வழியும் அளவுக்கு நல்ல வியாபாரமாம்.
பிராந்தி, விஸ்கி, ரம் போன்ற மதுவகைகள் 1 லட்சத்து 80 ஆயிரம் பெட்டிகள் (கேஸ்) விற்பனையாகி உள்ளன. பீர் வகைகள் ஒரு லட்சம் பெட்டிகள் விற்றுள்ளன. ஆக மொத்தம் 2 லட்சத்து 80 ஆயிரம் மதுபான பாட்டில்கள் கொண்ட பெட்டிகள் விற்பனையாகி இருக்கின்றன. பீர் மட்டும் 12 லட்சம் பாட்டில்கள் விற்று தீர்ந்துள்ளன. புத்தாண்டு தின விற்பனை அளவு ரூ. 95 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பீர் மட்டும் 11 கோடிக்கு விற்றுள்ளது.
இந்த விற்பனையானது கடந்த ஆண்டை விட 20 கோடி அதிகமாகும். கடந்த ஆண்டு ரூ. 75 கோடிக்கு மது விற்பனையானது என்பது குறிப்பிடத்தக்கது.
போன வருஷம் ரூ. 75 கோடி, இந்த வருஷம் ரூ. 95 கோடி, அப்படீன்னா அடுத்த வருஷம் ரூ. 115 கோடியா... சியர்ஸ்