மதுரை செக்கானூரணி கள்ளர் வகுப்பு மாணவிகளுக்கு ரூ.2.22 கோடியில் புதிய பள்ளி: ஜெ. உத்தரவு
சென்னை: மதுரை செக்கானூரணியில் கள்ளர் வகுப்பைச் சேர்ந்த மாணவிகளுக்கு என்று புதிய பள்ளியை கட்ட ரூ.2 கோடியே 22 லட்சம் நிதி ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
பிரமலை கள்ளர் வகுப்பைச் சார்ந்த மாணவ-மாணவியர்கள் அதிக அளவில் கல்வி பயிலுவதை ஊக்குவிக்கும் பொருட்டு, மதுரை மாவட்டம் பெருமாள்பட்டி, தேனி மாவட்டம் கருவேல் நாயக்கன்பட்டி மற்றும் பொ.மீனாட்சிபுரம் ஆகிய 3 இடங்களில் உள்ள அரசு கள்ளர் துவக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தியும், மதுரை மாவட்டம் கரடிக்கல் மற்றும் முத்துப்பட்டி,
திண்டுக்கல் மாவட்டம் சித்தர்கள் நத்தம் ஆகிய 3 இடங்களில் உள்ள அரசு கள்ளர் நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தியும், தேனி மாவட்டம் மார்க்கையன் கோட்டை மற்றும் முத்தணம்பட்டி, திண்டுக்கல் மாவட்டம் சென்னமநாயக்கன்பட்டி ஆகிய 3 இடங்களில் உள்ள அரசு கள்ளர் உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தியும் முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டார்.
மதுரை மாவட்டத்தில் உள்ள செக்கானூரணியில் உள்ள அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியிலிருந்து 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் சிறுமியருக்கு என தனியே செக்கானூரணியில் அரசு கள்ளர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தொடங்குவதற்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இப்பள்ளிக்கு கட்டிடம் கட்டுவதற்காக 2.02 கோடி ரூபாயும், ஆய்வக மற்றும் விளையாட்டு உபகரணங்கள், மேசை, நாற்காலி மற்றும் பீரோ போன்ற தளவாட சாமான்கள் வாங்குவதற்காக 20 லட்சம் ரூபாயும், ஆக மொத்தம் 2 கோடியே 22 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
உலமா ஓய்வூதியத்தினை 1,000 ரூபாயாக உயர்த்தியும், பயனாளிகள் எண்ணிக்கையை 2,600 ஆக உயர்த்தியும், வக்ஃப் வாரியத்தின் நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க அரசு மானியத்தை 1 கோடி ரூபாயாக உயர்த்தியும், ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படாமல் இருந்த ஓய்வூதியப் பலன்களை வழங்க சிறப்பு நிதியாக 3 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கியும், ஹஜ் குழுவிற்கு வழங்கும் மானியத்தை 20 லட்சமாக உயர்த்தியும் முதல்வர் ஜெயலலிதா ஏற்கனவே உத்தரவிட்டார்.
தற்பொழுது பள்ளிவாசல்கள், தர்காக்கள் போன்ற வக்ஃப் நிறுவனங்களில் பழுதுபார்ப்பு மற்றும் சிறப்புப்பணி மேற்கொள்வதற்காக, மாநில அளவில் வக்ஃப் நிறுவன மேம்பாட்டு நிதி ஒன்றினை துவக்குவதற்கும், இதற்கு தேவையான நிதியினை கொடையாளர்களிடமிருந்து பெறுவதற்கும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்த நிதிக்கு அரசு மானியமாக 2012-13 ஆம் நிதியாண்டில் 3 கோடி ரூபாய் வழங்கவும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications