சேலம் அருகே பிளஸ் 2 மாணவி மானபங்கம்: திமுக நிர்வாகிக்கு வலை
சேலம்: சேலம் அருகே பிளஸ் டூ மாணவியை மானபங்கப்படுத்திய திமுக நிர்வாகி தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டியை அடுத்து உள்ள பழையூர் இருசனாம்பட்டியைச் சேர்ந்தவர் குமார்(39). அவரது மகள் மாலதி(18). ஆட்டையாம்பட்டியில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகிறார். குமாருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ராஜா(41) என்பவருக்கும் இடையே முன்விரோதம் உள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சைக்கிளில் பள்ளிக்கு சென்ற மாலதி மீது மோதுவது போன்று சிலர் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். ராஜாவின் தூண்டுதலால் தான் அவர்கள் மாலதியிடம் வம்பு இழுத்ததாக குமார் நினைத்தார். இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக குமாருக்கும், ராஜாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த ராஜா தனது உறவினர் தங்கதுரை(34), திமுக நிர்வாகி பெரியண்ணன்(எ) கண்ணுப்பையன்(52) ஆகியோருடன் சேர்ந்து குமாரைத் தாக்கினார். இதைப் பார்த்த மாலதி அதை தடுத்தபோது அவரது உடைகளை அவிழ்த்து மானபங்கம் செய்துள்ளனர். இதையடுத்து இது குறித்து குமார் ஆட்டையாம்பட்டி போலீஸில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் ராஜாவையும், தங்கதுரையையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள பெரியண்ணனை வலை வீசித் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications